நகை, சொத்துக்களை எடுத்து கொண்டு காதலனுடன் மனைவி ஓட்டம் 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தந்தை தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது; திருவண்ணாமலை அருகே சோகம்
சேத்துப்பட்டு: மனைவியின் கள்ளக்காதல் உறவால் 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். போலீஸ் விசாரணையில் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(40) கூலிதொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (38). இவர்களது மகன் நிதர்ஷன்(7), மகள் கயல்விழி(9). குடும்பத்தோடு சென்னையில் தங்கி முதலில் கிருஷ்ணன் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் பூங்கொடிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதன் காரணமாக 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து பூங்கொடி ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது, கிருஷ்ணனின் வீட்டில் போட்ட 3 பவுன் நகை மற்றும் நில பத்திரத்தை பூங்கொடி எடுத்துச் சென்று விட்டாராம். அதனால் கிருஷ்ணன் மகள் கயல்விழியுடன் சென்னை குரோம்பேட்டையிலும், பூங்கொடி மகன் நிதர்ஷனுடனும் தனித்தனியே வசித்து வந்தனர்.
பூங்கொடி மகன் நிதர்ஷனை ஆகாரம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் விட்டிருந்தார். மனைவியின் கள்ளக்காதல் உறவு காரணமாக கிருஷ்ணன் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்து வந்தார். இந்நிலையில் கிருஷ்ணன் தீபாவளிக்காக மகளுடன் சொந்த ஊரான தெள்ளூருக்கு வந்தார். அப்போது மகன் நிதர்சனையும் அழைத்து வந்து தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு எழுந்த கிருஷ்ணன் திடீரென தூங்கிக்கொண்டிருந்த தனது 2 குழந்தைகளில் ஒரு குழந்தையை கழுத்தை நெரித்தும் மற்றொரு குழந்தையை நைலான் கயிற்றால் இறுக்கியும் கொலை செய்தார்.
தொடர்ந்து கிருஷ்ணனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை உறவினர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது கிருஷ்ணன் தூக்கில் தொங்கிய நிலையிலும், 2 குழந்தைகள் இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த சேத்துப்பட்டு போலீசார் 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கிருஷ்ணனின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது கிருஷ்ணன் உருக்கமாக எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், ‘கள்ளக்காதல் இருந்தால் வாழ்க்கை இது தான். பூங்கொடிக்கும், அவரது பெற்றோருக்கும் தண்டனை கொடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அங்கு 2 குழந்தைகள் இருந்ததால் அவர்கள் கஷ்டப்படுவார்கள் என நினைத்து விட்டுவிட்டேன். என் சொத்து, 3 பவுன் நகை எல்லாம் பூங்கொடி வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டாள். கொஞ்சம் கூட குழந்தைகள் மேல் அவளுக்கு பாசம் இல்லை.
குழந்தைகள் அவளிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறப்பதை விட என்னோடு இறப்பது நல்லது என்று நினைத்தேன். அந்த குடும்பம் சரி இல்லை’. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து கிருஷ்ணனின் அண்ணன் குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் கள்ளக்காதல் உறவால் 2 குழந்தைகளை கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.