ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள் இன்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர். "மக்களால் நான்.. மக்களுக்காக நான்" என்ற கர்ஜனை குரலுக்கு சொந்தக்காரர், ஜெயலலிதா. அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்து இன்றோடு 9 ஆண்டுகள் ஆனாலும், அதிமுக தொண்டர்களால் என்றென்றும் போற்றப்பட்டு வருகிறார். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த அரசியல் களத்தில், பெண்களாலும் சாதிக்க முடியும் என்று காலூன்றி ஜெயித்து காட்டியவர், ஜெயலலிதா. கடுமையான சவால்களுக்கு மத்தியில், அரசியலில் 9 ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க எழுச்சியை பெற்றார். எல்லா அரசியல் தலைவர்கள் போல ஜெயலலிதாவும் அரசியல் வாழ்வை எளிதாக கடந்துவரவில்லை. அதுவும் இவர் பெண் என்பதால், அரசியல் பாதை சற்று கடினமாகவே அமைந்தது.
திரைத்துறையில் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இவர், 1982-ம் ஆண்டு எம்ஜிஆர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நடிப்பின் மூலம் பிரபலமானவர் என்பதால், அப்போது அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 1987-ம் ஆண்டு முதலமைச்சர் பதவியில் இருந்தபோதே எம்ஜிஆர் மறைந்தார். அவருக்கு பிறகு அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாக உடைந்தது. முதலமைச்சர் பொறுப்பை எம்ஜிஆரின் மனைவி ஜானகி ஏற்றார். 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களில் வெற்றி பெற்றது. ஜானகி தலைமையிலான அணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், ஜானகி அரசியல் களத்தில் இருந்து விலகினார். அதன்பிறகு, ஒன்றிணைந்த அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். 1991, 2001, 2011, 2016 என 4 முறை முதலமைச்சர் பொறுப்பை வகித்தார்.
முதலமைச்சராக முதல் முறை (1991) பதவி வகித்தபோது, அதிக வருமான ஆதாரங்கள் இருந்ததால், சம்பள காசோலையை ஏற்க ஜெயலலிதா மறுத்துவிட்டார். அப்போது அவர் 1 ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றார். 2016-ம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, 70 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த போதிலும், சிகிச்சை பலனளிக்காமல் இதே நாளில் டிசம்பர் 5ம் தேதி மண்ணைவிட்டு மறைந்தார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள் இன்று, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர். அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.