விண்ணில் இந்திய செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து : 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ திட்டம்
பெங்களூரு : விண்ணில் இந்திய செயற்கைகோள்களை பாதுகாக்கும் வகையில், 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பூமி சுற்றுப்பாதையில் 105 நாடுகளைச் சேர்ந்த 12,149 செயற்கைக்கோள்கள் இருப்பது பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவுக்கு சொந்தமான 56 செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஆண்டு அண்டை நாட்டுக்கு சொந்தமான செயற்கைக்கோள் 1 கி.மீ. தொலைவில் இந்தியாவின் செயற்கைக்கோள் மீது மோதுவது போல் சென்றது. நல்வாய்ப்பாக ஒன்றும் ஆகவில்லை. இதன் காரணமாக விண்வெளியில் உள்ள இந்தியாவின் செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் திட்டம் ஒன்றை இந்தியா உருவாக்கி வருகிறது.
இந்த திட்டத்தின்படி, 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை உருவாக்கி பூமி சுற்றுப்பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோள்களை பாதுகாக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ரூ.27,000 கோடி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதிநவீன சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள், சிக்னல் ஜாம்மிங், சைபர் தாக்குதல்கள், எதிரி செயற்கைக்கோள்களின் குறுக்கீடு போன்ற அபாயங்களை எதிர்கொள்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இவை அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட உள்ளது.