ரூ.98.25 கோடி முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீண்டும் சேர்ப்பு
சென்னை: ரூ.98.25 கோடி முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீண்டும் சேர்கப்பட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடிக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதன்பேரில், வேலுமணி மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதால் வழக்கு தொடர கடந்த 2024-ல் சபாநாயகர் அனுமதி அளித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாக மீண்டும் வழக்குப் பதிய அனுமதி வழங்கப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரிகள் கே.எஸ்.கந்தசாமி, விஜயகார்த்திகேயன் மீது வழக்கு தொடர ஒன்றியஅரசு அனுமதி தரவில்லை. அதனால் வழக்கை ரத்து செய்த ஐகோர்ட், ஆதாரமிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அறப்போர் இயக்கம் தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது. இதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணையை செப். 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.