பங்குச்சந்தை சரிவால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு
மும்பை: அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு முடிவுகளால் வர்த்தகப்போர் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. இதனால், இந்திய பங்குச்சந்தைகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ் நேற்று முன்தினம் 80,623 புள்ளிகளில் நிறைவடைந்தது. நேற்று 80,478 புள்ளிகளுடன் சரிவுடனேயே துவங்கியது. அதிகபட்சமாக 80,550 புள்ளிகள் வரை சென்றது. 79,776 புள்ளிகள் வரை சரிந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 765 புள்ளிகள் சரிந்து 79,858 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 233 புள்ளிகள் சரிந்து 24,363 ஆகவும் இருந்தது. இது மூன்று மாதங்களில் இல்லாத சரிவாகும்.
மும்பை பங்குச்சந்தையில் பங்குகளின் மதிப்பு ரூ.445 லட்சம் கோடியில் இருந்து, ரூ.440 லட்சம் கோடியாகச் சரிந்தது.
இதனால் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடியை இழந்தனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்திருந்தார். இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து அதிகமாக கச்சா எண்ணெய் வாங்குவதாகக் குற்றம் சாட்டி, வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். பங்குச்சந்தை சரிவுக்கு இதுவே பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. இதுபோல், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 7ம் தேதி 4,997 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை வாபஸ் பெற்றனர். நடப்பு மாதத்தில் மட்டும் ரூ.15,950 கோடி முதலீடு வெளியேறியுள்ளது. இதுமட்டுமின்றி, நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் லாபம் குறைவு அல்லது இழப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு போன்றவையும் பங்குச்சந்தை சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.