தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட அதிகமாக 55.3% பெற்று முதலிடம்..!!
சென்னை: தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட அதிகமாக 55.3% பெற்று முதலிடம் பெற்றுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்தியாவில் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலம் எனும் இலக்கை அடைந்திடும் நோக்கில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள்.
அதன் பயனாக தமிழ்நாடு ஒவ்வொரு துறையிலும் அபரிமிதமான வளர்ச்சி கண்டு, இந்தியாவில் முன்னணி மாநிலமாக சிறந்து விளங்குகிறது. இதனை ஒன்றிய அரசினுடைய ஆய்வறிக்கைகள் அவ்வப்பொழுது வெளியிட்டு வருகின்றன. செய்தி ஊடகங்களும், செய்தி ஏடுகளும் கூட இந்த உண்மையை வெளிப்படுத்தி தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டின் தன்னிகரில்லா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்யும் பாராட்டி வருகின்றன.
அந்த வகையில், தொழில்துறை எரிசக்தித் திறனில் தமிழ்நாடு இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் எனத் திகழ்வதாக மாநில எரிசக்தி திறன் குறியீடு (State Energy Efficiency Index -SEEI) அமைப்பு தெரிவித்துள்ளது. தொழில்துறை எரிசக்தி திறனில் உச்சம் தொட்ட தமிழ்நாடு தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழ்நாடு தேசிய அளவில் உச்சம் பெற்று மாநில ஆற்றல் திறன் குறியீடு (SEEI) 2024 இன் குழு 1ல் 55.3 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம் அளவீட்டுக் குறியீடுகளின்படி, நாட்டின் மிக உயர்ந்த முன்னேற்றத்தைப் பதிவு செய்து, 27.5 சதவீத முன்னேற்றத்தைப் பதிவு செய்து, இரண்டாம் குழுவில் முன்னிலை வகிக்கிறது. 23.1சதவீதம் வளர்ச்சி பெற்று ஒடிசா 28.8 சதவீதம் வளர்ச்சி பெற்று சத்தீஸ்கர், 16.5சதவீதம் வளர்ச்சி பெற்று மத்தியப் பிரதேசம் 10.9 சதவீதம் வளர்ச்சி பெற்று திரிபுரா உள்ளிட்ட பல மாநிலங்களும் வலுவான முன்னேற்றத்தைப் படைத்துள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தன்மையுடன் கூடிய முயற்சிகளின் பயனாக குழு 1ல் உள்ள தமிழ்நாடு, கட்டுமானத் துறையில் ஆற்றல் திறன் முயற்சிகளை ஊக்குவிப்பதிலும், செயல்படுத்துவதிலும் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளது. மேலும், அதிக எண்ணிக்கையிலான சான்றளிக்கப்பட்ட பசுமை கட்டடங்களைக் கொண்ட முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
தமிழ்நாட்டின் PEACE திட்டம் வாயிலாக 2023-24 ஆம் ஆண்டில் விழிப்புணர்வு, பயிற்சி, எரிசக்தி தணிக்கை மானியங்கள் ஆகியவற்றுடன் செயல்படுத்தல் முயற்சிகளுக்காக குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான ஆற்றல் திறன்களுக்காக மொத்தம் 2.6 கோடி ரூபாய் முதலீடு செய்து ஊக்கப்படுத்தியுள்ளது. எரிசக்தி பாதுகாப்பு முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, 25 மாநிலங்கள் எரிசக்தி பாதுகாப்பு விருதுகளைப் பெற்றுள்ளன. விருதுகளின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஒடிசா ஆகியவை முன்னணியில் உள்ளன. அடுத்த நிலையில் குஜராத் இடம்பெற்றுள்ளது.
தொழில்துறை எரிசக்தி செயல்திறனில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ள மாநிலங்கள் வரிசைப்படி
1.தமிழ்நாடு - 55.3 சதவீதம்
2.சத்தீஸ்கர் - 29 சதவீதம்
3.ஆந்திரப் பிரதேசம் - 26 சதவீதம்
4.ஒடிசா - 23 சதவீதம்
5.மத்தியப் பிரதேசம் - 17 சதவீதம்
6.திரிபுரா - 11 சதவீதம்