இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்தி மீனவர்களை பாதுகாக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
சென்னை: இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்தி மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடராக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாகப்பட்டினம், செருதூரை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் செருதூரைச் சேர்ந்த மீனவர்கள் பலர் காயம் அடைந்துள்ளார்கள். மேலும் அவர்களின் வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை பறித்துச் சென்றுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்களின் கொடூரச் செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருபக்கம் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் படலம் நடந்து கொண்டு இருக்க மற்றொரு பக்கம் இலங்கை கடற்கொள்ளையர்களும் மீனவர்களை தாக்கி அவர்களின் பொருட்களை திருடிச் செல்லும் அதிர்ச்சிகர சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. வாழ்வாதாரத்திற்காக உயிரை பணயம் வைத்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்களை தாக்குவதோடு அவர்களிடம் இருந்து கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்தி மீனவர்களை பாதுகாக்க வேண்டும். ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக தூதரக ரீதியில் நடவடிக்கை எடுத்து மீனவர்கள் பிரச்சனையை முடிவுக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.