லண்டனில் காந்தி சிலை சேதம் வெட்கக்கேடான செயல்: இந்திய தூதரகம் கடும் கண்டனம்!
லண்டன்: லண்டனில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் டவிஸ்டோக் சதுர்க்கத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. தியான நிலையில் இருப்பதை போன்று அமைக்கப்பட்டுள்ளதோடு, ஒரு அடையாளமாக இந்த சிலை போற்றப்படுகிறது. இந்நிலையில், இந்த காந்தி சிலை நேற்று மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலை அமைந்துள்ள பகுதியில் காந்தி, மோடி இந்திய பயங்கரவாதிகள் என எழுதப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக லண்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதேவேளை, லண்டனில் காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்; லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலையை நாசப்படுத்திய வெட்கக்கேடான செயலை மிகவும் வருத்தத்துடன் வன்மையாகக் கண்டிக்கிறோம். வெறும் நாசவேலை மட்டுமல்ல, சர்வதேச அஹிம்சை தினத்திற்கு 3 நாட்களுக்கு முன்பு, அஹிம்சை கருத்து மற்றும் காந்தியின் மரபு மீதான வன்முறைத் தாக்குதல். இதுகுறித்து உடனடி மற்றும் வலுவான நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள அதிகாரிகளிடம் இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. சம்பவ இடத்தில் எங்கள் அதிகாரிகள் ஏற்கனவே சென்றுவிட்டனர். சிலையின் கண்ணியத்தை காக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.