இந்தியாவுக்கு தொடர்ந்து சிக்கல் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவ தளபதி சந்திப்பு
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் மற்றும் ராணுவ தளபதி முனீர் ஆகியோர் வெள்ளை மாளிகையில் சந்தித்துப்பேசினார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் போரை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார். இந்தியா இதனை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக அவர் கடுமையான வரிகளை விதித்தார். இதனால், அமெரிக்கா -இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளையும் சிக்கலாக்கி உள்ளது. இரு நாடுகளின் உறவில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே அதிபர் டொனால்ட் டிரம்பை பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் சந்தித்து பேசினார். வெள்ளை மாளிகையில் முன்னெப்போதும் இல்லாதவகையில் அவருக்கு விருந்து அளித்து உபசரித்தார். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் அமெரிக்காவில் இருக்கிறார். அதிபர் டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அசிம் முனீர் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.
வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் மூடப்பட்ட கதவுகளுக்குள் இந்த சந்திப்பு நடந்தது. இதில் துணை அதிபர் வான்ஸ் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். முன்னதாக பல நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், என்னை சந்திக்க ஒரு சிறந்த தலைவர் வருகிறார். பாகிஸ்தான் பிரதமர் வருகிறார். பாகிஸ்தானின் பீல்ட் மார்ஷல் மிகவும் சிறந்த மனிதர். பிரதமரும் அப்படித்தான். அவர்கள் வருகிறார்கள்” என்றார்.
* என்ன பேசினார்கள்?
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று சந்தித்துப் பேசினார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பாகிஸ்தானின் பங்கை வெளிப்படையாக ஆதரித்ததற்காக டிரம்ப்புக்கு ஷெரீப் நன்றி தெரிவித்தார். மேலும், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். டிரம்ப்பை, அமைதியின் மனிதர் என ஷெரீப் வர்ணித்தார்.
உலகின் பல பகுதிகளில் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் டிரம்ப்பின் நேர்மையான முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். தைரியமான, துணிச்சலான, தீர்க்கமான தலைமைப்பண்பை டிரம்ப் கொண்டுள்ளதாகவும் ஷெரீப் பாராட்டினார். மேலும், கடந்த மே மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 4 நாட்கள் நடந்த ராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் செய்த மத்தியஸ்தத்துக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இதன்மூலம், தெற்காசியாவில் ஒரு பெரிய பேரழிவைத் தவிர்க்க டிரம்ப் உதவியதாக பிரதமர் கூறினார். மேலும், தனது வசதிக்கு ஏற்ப பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளுமாறு டிரம்ப்புக்கு பிரதமர் ஷெரீப் அழைப்பு விடுத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 30 நிமிடம் காக்க வைத்த டிரம்ப்
அமெரிக்க நேரப்படி நேற்று மாலை 5 மணிக்கு ஷெபாஸ் ஷெரீப்பும் அசிம் முனீரும் வெள்ளை மாளிகைக்குச் சென்றுள்ளனர். அவர்களை, அங்கிருந்த மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது, டிரம்ப் தனது அலுவலகப் பணியில் இருந்ததால் இருவரும் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எவ்வளவு நேரம் காக்க வைக்கப்பட்டனர் என்பது குறித்த தகவல் இல்லை. என்றபோதிலும், அவர்கள் சுமார் 30 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
* 6 ஆண்டுகளுக்கு பிறகு பாக். பிரதமர் சந்திப்பு
பாக்.பிரதமராக இருந்த இம்ரான் கான், 2019ல் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபரைச் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபரை சந்திப்பது இதுவே முதல்முறை.ஓவல் அலுவலகத்தில் ஷெபாஸ் ஷெரீப்பும், ராணுவ தளபதி அசிம் முனீரும் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, அனைத்து கதவுகளும் மூடப்பட்டு ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.