மத்திய பல்கலைக் கழகங்களில் பெண்கள் பாதுகாப்புக்கான புகார் கமிட்டி செயல்படுகிறதா?.. திமுக எம்பி கனிமொழி கேள்வி
புதுடெல்லி: மக்களவையில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்வியில்,``பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகள் மற்றும் பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடை மற்றும் தீர்வுச் சட்டம் (2013) வழிகாட்டுதல்களின் கீழ் ஒன்றிய அரசின் மத்திய பல்கலைக்கழகங்களில் உள் புகார் குழுக்களை (ஐசிசி) நிறுவுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதா. இதுகுறித்த செயல்பாடுகள் பற்றி அரசாங்கம் மதிப்பீடுகள் அல்லது தணிக்கைகளை நடத்தியதா என்று கேட்டிருந்தார். இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?” ஆகிய கேள்விகளை கனிமொழி எம்.பி. கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தர்,”பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடை மற்றும் தீர்வுச் சட்டம், 2013 மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகள், 2015 ஆகியவற்றின் கீழ் உள் புகார் குழுக்களை மத்திய பல்கலைக் கழகங்களில் நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உள் புகார் குழுக்கள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்ய புகார்கள் பதிவு செய்தல், பாலின சமத்துவம் பற்றிய ஆய்வு ஆகியவற்றுக்காக சக்ஷம் போர்டல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.