திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் ஆட்டோ டிரைவர்களுடன் வருபவர்களுக்கு தரிசன டோக்கன்
திருமலை : திருப்பதியில் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் ஆட்டோ ஓட்டுனர்களுடன் வருபவர்களுக்கு தரிசன டோக்கன் வழங்கப்படுவதால் பக்தர்கள்கடும் அவதிப்படுகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
அவ்வாறு சந்திரகிரி அருகே உள்ள ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் வரும் பக்தர்களுக்கு தினந்தோறும் 3000 திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்பட்டு விரைவில் தரிசன செய்ய அனுமதிக்கப்படுகிறது.
இதற்காக பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிகாலையில் வந்து வரிசையில் நின்று டோக்கன் பெற்று மலைப்பாதையில் நடந்து செல்வது வழக்கம். ஆனால் இங்கு வரிசையில் உள்ள பக்தர்களை விட ஆட்டோ டிரைவர்கள் மூலம் வரும் பக்தர்களுக்கு பணம் பெற்று டோக்கன் வழங்கப்படுகிறது. இதற்கு தேவஸ்தான ஊழியர்களும் உடந்தையாக உள்ளனர் என பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இங்கு புரோக்கர்களின் ஆதிக்கம் தான் நடைபெறுகிறது. சில ஆட்டோ டிரைவர்கள் தாங்கள் அழைத்து வரும் பக்தர்களுக்கு தாமதமாக வந்தாலும் டோக்கன் வழங்கப்படுகிறது. மணிக்கணக்கில் வரிசையில் நின்றவர்களுக்கு டிக்கெட் வழங்குவதில்லை என புகார் எழுந்துள்ளது. பக்தர்களை கட்டுப்படுத்துவதிலும், வரிசையில் நிற்கும் முறையிலும் நடக்கும் பல முறைகேடுகளை போலீசார் கண்டுகொள்ளவில்லையாம்.
வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் திருமலைக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் இறங்கி உள்ளதால் சாதாரண பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே அறங்காவலர் குழு இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.