இந்தியாவில் ஒரு நாளைக்கு 18 வரதட்சணை மரணங்கள்: தேசிய குற்ற ஆவணப் பணியகம் தகவல்
சென்னை: இந்தியாவில் ஒரு நாளைக்கு 18 வரதட்சணை மரணங்கள் நிகழ்வதாக தேசிய குற்ற ஆவணப் பணியகம் தெரிவித்துள்ளது. ‘வரதட்சணை என்பது பெண்களை அடிமைப்படுத்துவதற்கும், பொருளாதார சுரண்டலுக்கு உள்ளாக்குவதற்கும் ஒரு கருவியாக இருக்கிறது. இது பெண்களின் கண்ணியத்தையும் சுதந்திரத்தையும் பறிக்கிறது’ என்று இந்திய அரசியலமைப்பின் தந்தையும் சமூக சீர்திருத்தவாதியுமான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கடுமையாக விமர்சித்தார். வரதட்சணை முறையை ஒரு சமூகத் தீமையாகக் கருதிய அவர், இதனை ஒழிக்க சட்டரீதியான மற்றும் சமூக சீர்திருத்தங்கள் அவசியம் என வலியுறுத்தினார். அவரது இந்த எச்சரிக்கை, இன்றும் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையின் முக்கிய காரணமாக வரதட்சணை தொடர்வதை எடுத்துக்காட்டுகிறது. சமீபத்தில் நொய்டாவில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினரால் வரதட்சணை காரணமாக தீயிட்டு எரிக்கப்பட்ட கொடூரமான சம்பவம், அம்பேத்கரின் கருத்துகளை மீண்டும் பொருத்தமாக்கியுள்ளது.
இந்த வழக்கு, திருமணமான பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறையையும், வரதட்சணையின் ஆழமான வேர்களையும் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்ற ஆவணப் பணியகம்,’2022ம் ஆண்டில் இந்தியாவில் 6,516 வரதட்சணை மரணங்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் 304பி பிரிவின் கீழ் பதிவாகியுள்ளது’ என தெரிவித்துள்ளது. இது, அதே ஆண்டில் பாலியல் பலாத்காரம் அல்லது கூட்டு பலாத்காரத்தால் உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கையை விட 25 மடங்கு அதிகமாகும். மேலும், 2022-ல் 13,641 பெண்கள் வரதட்சணை தொந்தரவு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கைகள், வரதட்சணை தொந்தரவுக்கு ஆளான மூன்று பெண்களில் ஒருவர் உயிரிழக்கலாம் என்று கூறினாலும், இது நம்பமுடியாத விகிதமாக இருப்பதால், பாதிக்கப்பட்ட பெண்கள் கடைசி நேரம் வரை சட்ட உதவியை நாடுவதில்லை என்பதை வழக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
வரதட்சணை மரணங்களுக்கு நீதி கிடைப்பது மிகவும் மெதுவாக உள்ளது. 2022ம் ஆண்டு இறுதியில், 60,577 வரதட்சணை மரண வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தன, இதில் 54,416 வழக்குகள் முந்தைய ஆண்டுகளில் இருந்து தொடர்ந்தவை. அந்த ஆண்டில் 3,689 வழக்குகளில் விசாரணை முடிவடைந்தது, ஆனால் வெறும் 33% வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது. 2022-ல் புதிதாக 6,161 வழக்குகள் விசாரணைக்கு அனுப்பப்பட்டன, ஆனால் அவற்றில் 99 வழக்குகளில் மட்டுமே தண்டனை பெறப்பட்டது. இதன்படி, ஒரு வருடத்திற்குள் தண்டனை பெறுவதற்கான வாய்ப்பு 2% க்கும் குறைவாக உள்ளது. இந்த மெதுவான நீதி அமைப்பு, வரதட்சணை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் இயல்பாக்கப்பட்ட சட்டவிரோத பழக்கம் வரதட்சணை. இந்தியாவில் மிகவும் ஆழமாக வேரூன்றிய, ஆனால் சட்டவிரோதமான பழக்கமாக தொடர்கிறது.
2004-05ம் ஆண்டில் இந்திய மனித வளர்ச்சி கணக்கெடுப்பு சில தகவல்களை வெளிப்படுத்தியது. அதில்,மணமகள் குடும்பங்கள், மணமகன் குடும்பங்களை விட 1.5 மடங்கு அதிகமாக திருமண செலவுகளை ஏற்கின்றன.
24% குடும்பங்கள் டிவி, குளிர்சாதனப் பெட்டி, கார் அல்லது மோட்டார் சைக்கிள் போன்ற நுகர்வோர் பொருட்களை வரதட்சணையாக வழங்குவதாக தெரிவித்தன. 29% பேர், வரதட்சணை கோரிக்கைகளை பூர்த்தி செய்ய முடியாதபோது பெண்களை அடிப்பது ‘‘பொதுவானது” என்று தெரிவித்தனர். 2019-21 தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு, குடும்ப வன்முறையின் பரந்த பின்னணியை வெளிப்படுத்துகிறது. 18-49 வயதுடைய திருமணமான பெண்களில் 29% பேர் தங்கள் கணவர் அல்லது துணையால் உடல் அல்லது பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தனர். கணக்கெடுப்புக்கு முந்தைய ஒரு வருடத்தில் 24% பேர் இத்தகைய வன்முறையை எதிர்கொண்டனர்.
வன்முறைக்கு ஆளானவர்களில் 3.3% பேர் கடுமையான தீக்காயங்களை சந்தித்தனர். 7.3% பேர் கண் காயங்கள், முறிவுகள் அல்லது சிறிய தீக்காயங்களை அனுபவித்தனர். 6.2% பேர் ஆழமான காயங்கள், எலும்பு முறிவுகள் அல்லது பல் உடைவுகளை பெற்றனர். 21.8% பேர் வெட்டுக்கள், காயங்கள் அல்லது உடல் வலிகளை அனுபவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் கடைசி நேரம் வரை சட்ட உதவியை நாடுவதில்லை என்பதை வழக்குகள் காட்டுகின்றன.வரதட்சணை இந்தியாவில் இயல்பாக்கப்பட்ட சட்டவிரோத பழக்கமாக உள்ளது. இது பெண்களுக்கு எதிரான வன்முறையை தூண்டுகிறது. வரதட்சணையை ஒழிக்க விழிப்புணர்வு, கல்வி மற்றும் கடுமையான சட்ட அமலாக்கம் அவசியம்.