தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘இந்தியா’ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: மக்களாட்சியை காக்க வெற்றி பெற்று வரவேண்டும் என முதல்வர் வாழ்த்து

சென்னை: இந்தியா கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது, மக்களாட்சியை காக்க வெற்றி பெற்று வர வேண்டும் என முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் 14வது குடியரசு துணை தலைவராக இருந்தவர் ஜகதீப் தன்கர். இவர் தனது பதவியை கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். இவரின் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் 10ம் தேதி வரை இருந்தது.

Advertisement

ஆனால், உடல்நலத்தை காரணம் காட்டி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, குடியரசு துணை தலைவர் பதவி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தொடர்ந்து, அடுத்த மாதம் 9ம் தேதி குடியரசு துணை தலைவர் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தது. அன்றைய தினம் பாராளுமன்றத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அன்றைய தினமே அறிவிக்கப்படும். துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சி கூட்டணியும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளன.

பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மகாராஷ்டிரா கவர்னரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆந்திராவை சேர்ந்த பி.சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். இருவரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் பாஜ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆதரவு திரட்டும் பணியை தொடங்கி இருக்கிறார்.

அவர் டெல்லியில் பாஜ மூத்த தலைவர்கள் அனைவரையும் அவர்களது வீட்டுக்கே சென்று சந்தித்து பேசி தனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமாக சென்று பாஜ கூட்டணி எம்பிக்களின் ஆதரவை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதுபோல, இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களுக்கும் செல்ல ஏற்பாடு செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் அவரது சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் சுதர்சன் ரெட்டி தமிழ்நாட்டில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து நேற்று மதியம் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை திமுக எம்பிக்கள் ஆ.ராசா, திருச்சி சிவா, வில்சன், கலாநிதி வீராசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார், எம்எல்ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்து காரில் புறப்பட்ட சுதர்சன் ரெட்டி சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்கினார்.

தொடர்ந்து மாலையில் தி.நகரில் உள்ள ஓட்டலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை சுதர்சன் ரெட்டி சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சுதர்சன் ரெட்டி ஆதரவு கோரினார். திமுக சார்பில் முழு ஆதரவு அளிப்பதாக முதல்வர் கூறினார். மேலும் அவருக்கு அய்யன் திருவள்ளுவரின் சிலையை நினைவு பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, இந்தியா கூட்டணியின் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை கொறடா நாசீர் உசேன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் இந்தியா கூட்டணியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் சுதர்சன் ரெட்டியை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடிய சுதர்சன் ரெட்டியை தமிழ்நாட்டுக்கு வருக, வருக, வருக என வரவேற்கிறேன். திமுகவின் தலைவராக மட்டுமல்ல மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பிலும் முதலில் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

சுதர்சன் ரெட்டி, அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் உச்ச நீதிமன்ற நீதியரசராக பணியாற்றுகின்ற நீங்கள், இந்திய குடியரசு துணை தலைவர் பொறுப்புக்கு மிகவும் தகுதிவாய்ந்தவர். அதனால்தான், இந்தியா கூட்டணி சார்பில், உங்களை வேட்பாளராக அறிவித்திருக்கிறோம். உங்களை ஒருமனதாக தேர்ந்தெடுத்து அறிவித்த இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா கூட்டணியினர் மட்டுமில்லை, ஜனநாயகத்தின் மீது மக்களாட்சி தத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற அத்தனை பேரும் உங்களைத்தான் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

தென் மாநிலத்தைச் சேர்ந்த இவருடைய புரோபைலை எல்லோரும் கவனிக்கவேண்டும். உஸ்மானியா யூனிவர்சிட்டியில் சட்டம் பயின்று, 1971ல் வழக்கறிஞராக ப்ராக்டிஸ் செய்ய தொடங்கினார். பின்னர், ஆந்திர மாநில அரசு வழக்கறிஞர்-ஒன்றிய அரசின் கூடுதல் நிலை ஆலோசகர்-ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதி- கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்று படிப்படியாக தன்னுடைய கேரியரில் முன்னேறி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்து, இன்றைக்கு குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உயர்ந்திருக்கிறார்.

இவர் நீதியரசராக பணியாற்றிய காலத்தில், நேர்மையாக, சுதந்திரமாக செயல்பட்டு, மக்களுடைய உரிமைகளையும், சமூகநீதியையும் உயர்த்திப் பிடித்து, அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பையும் போற்றி பாதுகாத்தவர். பாஜவினர் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க நினைக்கின்ற இந்த நேரத்தில், அரசியல் சட்டத்தை பாதுகாத்த நீதியரசரான இவர், அதை பாதுகாக்கின்ற பொறுப்புக்கு தேவைப்படுகிறார்.சுதர்சன் ரெட்டியை பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கக் கூடியவர்.

புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய மாநாட்டில் அவர் பேசியதை சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், ‘‘புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராடுவது நம்முடைய கடமை. இது இந்த தேசத்துக்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. இவர்கள் கொண்டுவர நினைக்கின்ற தேசிய கல்விக் கொள்கை மனித மாண்புகளுக்கு எதிரானது. நான் - எனது - என்னுடையது என்ற கலாச்சாரத்தை மட்டுமே இது உருவாக்கும்.

பன்முகத் தன்மையையோ, கல்வியின் ஜனநாயக பரவலையோ இது உருவாக்காது” என்று தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்து, தமிழ்நாட்டின் உணர்வுகளை உறுதியுடன் வெளிப்படுத்தினார். இப்படி, அரசியலமைப்புச் சட்டத்துக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும், முற்போக்காகவும், மக்களுக்காகவும் பேசுகின்ற இவரை நாம் முன்மொழிய, இதைவிட பெரிய காரணம் தேவையா? ஆனால், இவரை உள்துறை அமைச்சர் நக்சல் என்று விமர்சிக்கிறார். அவர்களால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை.

அந்த கையாலாகாத நிலையை மறைக்க, நீதியரசர் மேல் பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவர் நமக்கு கிடைத்திருக்கிறார். அவரை ஆதரிப்பதே நமது கடமை. ஆனால், பாஜவோ, தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரான அத்தனை நடவடிக்கைகளையும் செய்துவிட்டு, தமிழர் என்ற முகமூடியை அணிந்து ஆதரவு கேட்கிறார்கள். எந்த கருத்தியல் மக்களுக்கான, மக்கள் நலனுக்கான கருத்தியலோ, அதைத்தான் ஆதரிக்க வேண்டும்.

எனவே, சட்டநீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடிய, வாதாடிய, தீர்ப்பு வழங்கிய சுதர்சன் ரெட்டி இந்திய ஜனநாயகத்தைக் காக்க, நாடாளுமன்ற மரபுகளைக் காக்க, மக்களாட்சியைக் காக்க, அரசியலமைப்பைக் காக்க குடியரசுத் துணைத் தலைவராக வெற்றி பெற்று வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வேட்பாளர் சுதர்சன் ரெட்டி பேசியதாவது: தமிழ்நாடு கல்வி, சுகாதாரத்தில் நாட்டிலேயே சிறந்து விளங்குகிறது. இந்தியா என்பது பல மாநிலங்களின் கூட்டமைப்பு. மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை.

தனித்துவமான கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியத்தை ஆகியவற்றால் தமிழகம் சிறந்து விளங்குகிறது. சமூக, பொருளாதார கொள்கைகளை வகுப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்து வரும் போது எல்லாம் முதல்வர் போராடி வருகிறார். கூட்டாட்சி தத்துவத்தை காப்பதில் முன்னோடியாக விளங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தொலைநோக்கு பார்வையிலும் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது தமிழகம்.

இன்றைய நிலையில் கூட்டாட்சிக்கு மட்டுமல்ல, அரசியலைப்புக்கே ஆபத்து வந்துள்ளது. துணை ஜனாதிபதியாக எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் அரசியலமைப்பை காக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். இவ்வாறு சுதர்சன் ரெட்டி பேசினார். தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சியின் எம்பிக்கள் சுதர்சன ரெட்டியை தனி, தனியாக சந்தித்து சால்வை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் வாழ்த்து தெரிவித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் சுதர்சனம் ரெட்டி தலைவர்கள், எம்பிக்களுக்கு விருந்து அளித்தார்.

* இந்தியா கூட்டணியினர் மட்டுமில்லை, ஜனநாயகத்தின் மீது மக்களாட்சி தத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற அத்தனை பேரும் உங்களைத்தான் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

* சுதர்சன் ரெட்டி நீதியரசராக பணியாற்றிய காலத்தில், நேர்மையாக, சுதந்திரமாக செயல்பட்டு, மக்களுடைய உரிமைகளையும், சமூகநீதியையும் உயர்த்திப் பிடித்து, அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பையும் போற்றி பாதுகாத்தவர்.

* தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கக் கூடியவர்.

* இவரை நக்சல் என்று சொல்கிறார், ஒரு உள்துறை அமைச்சர். அவர்களால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை. அந்த கையாலாகாத நிலையை மறைக்க, நீதியரசர் மேல் பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

Advertisement