இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை : காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவம் அதிரடி!!
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் குப்வாராவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று இரவு பாதுகாப்புப்படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தானில் இருந்து 2 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதைக் கண்டறிந்த ராணுவத்தினர் எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை.
அவர்களின் ஊடுருவலை தடுக்கும் முயற்சிகளில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் இடையே சண்டை நீண்ட நேரம் நீடித்தது. நீண்ட நேரம் போராடி ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். அப்போது பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். ஆகையால், என்கவுன்டர் நடந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை, ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.