இந்தியா- இஸ்ரேல் வர்த்தக ஒப்பந்தம் இரண்டு கட்டமாக அமல்படுத்தப்படும்: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்
ஜெருசலேம்:ஆரம்பகால ஆதாயங்களை வழங்குவதற்காக இந்தியாவும், இஸ்ரேலும் முன்மொழியப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை இரண்டு கட்டங்களாக செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்தார். ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். அவருடன் 60 பேர் கொண்ட வணிக குழுவும் சென்றுள்ளது.
அமைச்சர் பியூஷ் கோயல் அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர் பர்கத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை முறையாக தொடங்குவதற்கான விதிமுறைகளில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. அதன் பிறகு பியூஷ் கோயல் கூறுகையில், ‘தடையில்லா வர்த்தக ஒப்பந்த்தில் தாமதங்களை தவிர்க்க முதலில் ஒரு ஆரம்ப கட்டத்தை முன்னிறுத்த விரும்புகிறோம்.
இந்த ஒப்பந்தத்தை 2 கட்டங்களாக செய்வது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். பேச்சுவார்த்தை தொடங்கும் போது ஒரு முடிவு எடுக்கப்படும். வர்த்தக சமூகம் விரைவில் பயனடையும் வகையில் முதல் கட்டத்தை விரைவில் இறுதி செய்ய இரு அமைச்சர்களும் ஆர்வமாக உள்ளனர். டெல் அவிவில் 300 கிமீ நிலத்தடி சுரங்க பாதையை உள்ளடக்கிய ரூ.4.5லட்சம் கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படுகிறது. இதில் இந்திய நிறுவனங்கள் பங்கேற்க ஆர்வமாக உள்ளன’’ என்றார்.