நாட்டின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார்: காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது
* இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு கலாம் விருது, துளசிமதிக்கு கல்பனா சாவ்லா விருது
சென்னை: நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் 119 அடி உயர கொடிக்கம்பத்தில், மூவர்ண கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் 5வது முறையாக ஏற்றி வைத்தார். நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை, ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் 5வது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க காலை 8.48 மணிக்கு கோட்டை கொத்தளம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். பின்னர், தென்னிந்திய பகுதிகளின் தலைமை படைத் தலைவர் லெப்டின்ட் ஜெனரல் ஸ்ரீ ஹரி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய், ஏர் கமாண்டர் தபன் சர்மா, கடலோர காவல்படை டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாலகிருஷ்ணன் முருகன், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால், கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோரை முதல்வருக்கு தலைமை செயலாளர் முருகானந்தம் அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை மற்றும் கேரள காவல்துறையினர் நடத்திய அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் முதல்வர் பார்வையிட்டார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் சரியாக காலை 9 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றினார்.
தொடர்ந்து, இந்தாண்டுக்கான தகைசால் தமிழர் விருது கே.எம்.காதர் மொகிதீனுக்கும், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கும், துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது பிறவிலேயே இடது கையில் தசைநார் சிதைவு குறைபாடு இருந்தபோதும், உடல் சவால்களை தடையாக கருதாமல் இறகு பந்தாட்ட விளையாட்டு துறையில் சாதனை படைத்த காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த துளசிமதி முருகேசனுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
முதலமைச்சரின் நல் ஆளுமை விருது: சமுதாய பங்கேற்பு மூலம் மாற்றத்தை கொண்டு வரும் ஊரக மேம்பாட்டு முயற்சிகள் பிரிவில் உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா குமார், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
அதேபோல், வீடு கட்டிட வரைப்பட அனுமதிகளை பெறும் முறைகளை எளிதாக்கியமைக்காக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் காகர்லா உஷா, நகர் ஊரமைப்பு இயக்குநர் கணேசன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையை சார்ந்த நலத்திட்டங்கள் மூலம் தொழில்முனைவோர்களை ஊக்குவித்து செயல்படுத்திய பிரிவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை செயலாளர் லஷ்மி பிரியா, ஆதிதிராவிடர் நல ஆணையர் ஆனந்த், பழங்குடியில் நலத்துறை புகைப்பட அண்ணாதுரை, தாட்கோ இயக்குநர் கந்தசாமி ஆகியோருக்கும் முதல்வரின் நல்லாளுமை விருது (குழு) வழங்கப்பட்டது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலம் அமைத்தது, சுற்றுலா துறையை மேம்படுத்தியமைக்காக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு நல்லாளுமை விருது அந்த துறை செயலாளர் செல்வராஜுக்கும், தமிழ் மொழியினை உலக அளவில் மேம்பட முயற்சி எடுத்த தமிழ் இணைய கல்வி கழகத்தின் இணை இயக்குநர் கோமகன் ஆகியோருக்கு நல்லாளுமை விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த மருத்துவர் விருது திருச்சியை சேர்ந்த மருத்துவர் குமரவேல் சண்முகசுந்தரத்துக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த நிறுவனமான எக்காம்வெல் மாற்றுத்திறனாளி மறுவாழ்வு மையத்திற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த சமூக பணியாளர் கோவையை சேர்ந்த குணசேகரன் ஜெகதீசனுக்கும், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பணி அமர்த்தியுள்ள பெல் பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினர்.
ஆவடி மாநகராட்சி, உத்திரமேரூர் பேரூராட்சிக்கு பரிசு: சமூக நலத்திற்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான விருதுகள் பிரிவில் மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த சமூக சேவகர் விருது சென்னையை சேர்ந்த பாகீரதி ராமமூர்த்தி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து ஆகியோருக்கும், மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த தொண்டு நிறுவனமான கர்நாடக சமூக சேவை நிறுவனம் (சென்னை), சொசைட்டி பார் எஜுகேஷன் வில்லேஜ் ஆக்சன் மற்றும் இம்ப்ரூவ்மெண்ட் (திருச்சி) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள் பிரிவில் சென்னை மாநகராட்சியின் சிறந்த மண்டலமாக முதல் பரிசு 6வது மண்டலத்திற்கும், இரண்டாவது பரிசாக 13வது மண்டலத்திற்கும், சிறந்த மாநகராட்சி முதல் பரிசு ஆவடி மாநகராட்சிக்கும், இரண்டாவது இடம் நாமக்கல் மாநகராட்சிக்கும், சிறந்த நகராட்சியாக முதல் பரிசு ராஜபாளையம் நகராட்சிக்கும், இரண்டாவது பரிசாக ராமேஸ்வரம் நகராட்சிக்கும், மூன்றாவது பரிசாக பெரம்பலூர் நகராட்சிக்கும், சிறந்த பேரூராட்சியாக முதல் பரிசு உத்திரமேரூர் பேரூராட்சிக்கும்,
இரண்டாவது பரிசு காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்கும், மூன்றாம் பரிசு நத்தம் பேரூராட்சிக்கும் வழங்கப்பட்டது. அதேபோல் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகளில் ஆண்கள் பிரிவில் விழுப்புரத்தை சேர்ந்த சந்துரு குமார், திருநெல்வேலி சேர்ந்த ஜெயக்குமார், சேலம் சேர்ந்த மாரியப்பன், பெண்கள் பிரிவில் சென்னை சேர்ந்த கஜிமா, புதுக்கோட்டையை சேர்ந்த லாவண்யா, கிருஷ்ணகிரி சேர்ந்த கவுரி ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
* கே.எம்.காதர்மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது
கே.எம்.காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர். கோவையில் 2010ம் ஆண்டில் நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் செம்மொழி தமிழும் அரபியும் - ஓர் ஒப்பாய்வு என்ற ஆய்வு கட்டுரை வழங்கியவர். தாருல் குர்ஆன் இதழில் ‘தமிழர்க்கு இசுலாம் வந்த மதமா? சொந்தமா?’ எனும் தலைப்பில் எட்டு ஆண்டுகள் தொடர் கட்டுரையாக எழுதியவர்.
வாழும் நெறி, குர்ஆனின் குரல், இசுலாமிய இறைக்கோட்பாடு உள்ளிட்ட நூல்களை படைத்தவர். தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றியதால் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு, விருது தொகையாக ரூ.10 லட்சம் மற்றும் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
* இஸ்ரோ தலைவருக்கு அப்துல் கலாம் விருது
முனைவர் வ.நாராயணன், இஸ்ரோவில் 41 ஆண்டுகளாக பல முக்கிய தலைமை பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியதற்காகவும், குறிப்பாக 7 ஆண்டுகள் திரவ இயக்க முறைமைகள் மையத்தின் இயக்குநராக பணியாற்றியதை கருத்தில் கொண்டும், விண்வெளி துறை செயலராகவும், இஸ்ரோ தலைவர் மற்றும் விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இஸ்ரோவின் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களுக்கான உந்துவிசை அமைப்புகளை உருவாக்குவதில் முன்னோடியாக திகழ்ந்தார்.
கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்பை உருவாக்குவதிலும், அதன் நிலைகளை மேம்படுத்துவதிலும் தலைமை தாங்கினார். இதன்மூலம், இந்த தொழில்நுட்பம் கொண்ட உலகின் 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக ஆனது. திட்ட இயக்குநராக, எல்.வி.எம்.3 ஏவுகணை வாகனத்துக்கான சி25 கிரையோஜெனிக் நிலையை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார் நாராயணன்.
இந்த சாதனைக்காக அவர் மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக, சந்திரயான்-2 மற்றும் சந்திரயான்-3 திட்டங்களுக்கான ஏவுகணை வாகனங்கள் மற்றும் விண்கலங்களுக்கான உந்துவிசை அமைப்புகளை உருவாக்குவதில் தலைமை தாங்கினார். இவருக்கு, விருது தொகையாக ரூ.5 லட்சம் மற்றும் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
* துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லா விருது
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன், பிறவியிலேயே இடது கையில் தசைநார் சிதைவு குறைபாடு இருந்தபோதும், உடல் சவால்களை தடையாக கருதாமல் இறகு பந்தாட்டம் விளையாட்டு துறையில் சாதனை படைத்து வருகிறார். இவர் தற்போது, நாமக்கல் அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த சிறு வயதில், பல்வேறு உலக நாடுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்று, இதுவரை 22 தங்கம், 11 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களை வென்று தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.
விளையாட்டு துறையில் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான ‘அர்ஜூனா விருது’ பெற்ற பெருமைக்குரியவர். அவரது துணிவு மற்றும் சாகச செயலுக்கான சாதனையை பாராட்டி 2025ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு ரூ.5 லட்சம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.