பொறுப்பு டிஜிபி குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு பேச எந்த அருகதையும் இல்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி
புதுக்கோட்டை: பொறுப்பு டிஜிபி குறித்து கேள்வி கேட்க எடப்பாடிக்கு என்ன தகுதி உள்ளது. டிஜிபி பட்டியலை ஒன்றிய அரசுக்கு அனுப்பி உள்ளோம். தமிழ்நாட்டில் பொறுப்பு டி.ஜி.பி. என்ற முறையைக் கொண்டு வந்ததே அதிமுக ஆட்சியில்தான். இன்று அதைப் பற்றி பேச எந்த அருகதையும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது என்று அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார். 2011ல் ராமானுஜத்தை பொறுப்பு டி.ஜி.பி. ஆகவும், ராஜேந்திரனை பொறுப்பு டி.ஜி.பி. ஆகவும் கொண்டு வந்தது அதிமுகதான்.
மாநில அரசு விருப்பப்படிதான் டிஜிபி நியமனம் இருக்கும்; ஆனால் அத்தகைய சூழல் தற்போது இல்லை. தங்களுக்கு வேண்டியவரை டிஜிபியாக நியமிக்க ஒன்றிய அரசு நினைக்கிறது அது நிச்சயம் நடக்காது. தமிழ்நாடு பரிந்துரைக்கும் டிஜிபியை ஒன்றிய அரசு ஏற்காததே பொறுப்பு டிஜிபி நீட்டிக்க காரணம். முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி இப்பது பேசுவது வேடிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டுக்கு வேண்டியவர்களை நாங்கள் கேட்கிறோம்.
மாநில உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. கற்பனை கதைகளை பரப்பி, அதன் மூலம் அவதூறு அரசியல் செய்ய எடப்பாடி நினைக்கிறார். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால்தா சிபிஐ விசாரணை வேண்டாம் என்றோம். சிபிஐயை கண்டு திமுக என்றும் அஞ்சியது கிடையாது. எஸ்.ஐ.ஆரை கண்டு திமுகவுக்கு பயம் இல்லை; ஆனால் அவசர கதியில் நடத்தக் கூடாது என்றுதான் கூறுகிறோம். போபால், ஆக்ரா, புனேவுக்கு அனுமதி கொடுத்த மெட்ரோ ரயில் கொள்கை, கோவை, மதுரைக்கு மட்டும் அனுமதி மறுத்தது ஏன் என்று அமைச்சர் ரகுபதி கேள்வி கேட்டுள்ளார்.