தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றும் சங்கர் ஜிவால், தமிழக போலீஸ் வீட்டுவசதி துறை டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் இன்று (ஆக.31) ஓய்வு பெறுகிறார்கள்.
சங்கர் ஜிவால், டி.ஜி.பி. பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தமிழக போலீஸ்துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பணியை பாராட்டும் விதமாக அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற செப்.1-ந் தேதி அன்று சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் இந்த புதிய பணியை தொடங்குகிறார்.
இந்நிலையில், தமிழக போலீஸ்துறையின் நிர்வாக டி.ஜி.பி. வெங்கடராமன் தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (ஆக.31) மாலை 4 மணியளவில் டி.ஜி.பி. அலுவலகத்தில் வைத்து சங்கர் ஜிவால் தனது பொறுப்புகளை பொறுப்பு டி.ஜி.பி.யாக பதவியேற்கும் வெங்கடராமனிடம் ஒப்படைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.