வளர்ச்சி திட்டங்களை முறையாக செயல்படுத்தி மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
*அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை
கள்ளக்குறிச்சி : வளர்ச்சி திட்டங்களை முறையாக செயல்படுத்தி மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை கூறினார்.தமிழ்நாடு அரசின் சார்பில் கல்வராயன்மலை பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு துறை சார்பில் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோன்று போதை பொருள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ் மலைவாழ் மக்கள் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை தவிர்த்து பொருளாதார மேம்பாடு அடைய அரசின் சார்பில் அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கல்வராயன்மலை மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் போதை பொருள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், கல்வராயன்மலையில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுப்பதற்கு காவல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கல்வராயன்மலைவாழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆவின் மூலம் பால் கொள்முதல் நிலையங்களை அதிகரித்தல், சாலை பணிகள் மேம்படுத்துதல், வருவாய்த்துறை சார்பில் வன உரிமை சான்றிதழ் வழங்க தொடர் நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இவற்றின் மூலம் கல்வராயன்மலைவாழ் மக்களின் பொருளாதாரம் மேம்படுவதோடு, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஓராண்டு காலமாக போதை பொருள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ் கல்வராயன்மலையில் அனைத்து துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விரிவாக துறை வாரியாக விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து கல்வராயன்மலைவாழ் மக்களுக்கு அரசின் வளர்ச்சி திட்டங்களை முறையாக செயல்படுத்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், உதவி ஆணையர் (கலால்) செந்தில்குமார் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.