உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்திய மசாலா, தேயிலை மீதான இறக்குமதி வரி ரத்து: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிகரித்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 100க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் மீதான வரியை ரத்து செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் மளிகைப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலை, மசாலாப் பொருட்கள் மீது இந்த ஆண்டின் தொடக்கத்தில் 50% வரை கடுமையான வரி விதிக்கப்பட்டது. இதனால், அமெரிக்காவில் இந்திய உணவுப் பொருட்களின் விலை சுமார் 30% வரை அதிகரித்தது. அதேபோல, மாட்டிறைச்சி உள்ளிட்ட பிற உணவுப் பொருட்களின் விலையும் வரலாறு காணாத உயர்வைச் சந்தித்தது. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில், அமெரிக்க மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் வகையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (நவம்பர் 14) ஒரு சிறப்பு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவு நவம்பர் 13ம் தேதியன்றே முன்தேதியிட்டு அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, 100க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது அல்லது முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலை, மசாலாப் பொருட்கள், பழச்சாறுகள், கோகோ, வாழைப்பழங்கள், ஆரஞ்சு, தக்காளி, சில வகை உரங்கள் மற்றும் மாட்டிறைச்சி ஆகியவை அடங்கும். இந்த வரிக்குறைப்பு, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘இந்திய மாம்பழ ஏற்றுமதிக்கு இந்த உத்தரவில் நேரடியாக எந்தச் சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ள பரந்த வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்திய ஏற்றுமதிகள் மீதான ஒட்டுமொத்த வரியை 15% முதல் 16% வரை குறைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது’ இருதரப்பு வர்த்தக உறவில் நல்ல அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.