மக்களின் தேவைகள், அவசியம் அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
பெரம்பூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 175வது நாளாக,அன்னம் தரும் அமுதக் கரங்கள்’’ நிகழ்ச்சி கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம் காலனி, வெற்றி நகர், வேணுகோபால் தெரு பகுதிகளில் இன்று காலை நடந்தது. இதில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு ஏழை, எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, மண்டல குழு தலைவர் சரிதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார் கலந்துகொண்டனர். இதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, ‘’சராசரியாக ஒரு நாளைக்கு 1200 பேர் என 2 லட்சத்துக்கு அதிகமான பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.
ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு தாயுமானவர் திட்டத்தை தோல்வி பயத்தால் திமுக அரசு அறிவித்து வருகிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே? ஒரு ஆட்சி ஏற்பட்டவுடன் ஒட்டுமொத்தமாக அனைத்து திட்டங்களையும் ஒரேநாளில் அறிவித்துவிட்டு செயல்படுத்த முடியாது. முதலில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள், மக்களுக்கு தேவைப்படுகின்ற இன்றியமையாத பல்வேறு தேவைகளை நிதிநிலைக்கேற்ப மக்களின் அதிக தேவைகளுக்கு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஒருபுறம் இருந்தாலும் அறிவிப்பில் இல்லாத மக்களின் தேவைகளுக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து இருக்கிறோம்.