Dude திரைப்படத்தில் அனுமதி இல்லாமல் இரண்டு பாடல்கள் பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடர இளையராஜாவுக்கு ஐகோர்ட் அனுமதி!!
சென்னை : பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான Dude திரைப்படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல் இரண்டு பாடல்கள் பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடர இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடல்களை வேறு படங்களுக்கு பயன்படுத்தியதாக சோனி மியூசிக் என்டர்டைன்மென்ட் இந்திய பிரைவேட் லிமிடட் நிறுவனம், எக்கோ ரெகார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபல இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை வணிகரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் குறித்த விவரங்கள், வரவு செலவுகளை தாக்கல் செய்ய சோனி நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, வழக்கில் சோனி நிறுவனம் இதுவரை எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை என்றும், தற்போது வெளியாகியுள்ள Dude என்ற திரைப்படத்தில் கூட தனது இரண்டு பாடல்கள் பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
சோனி நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், சோனி நிறுவனம் ஈட்டிய வருவாயை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.இ ரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி என்.செந்தில் குமார், சீலிடப்பட்ட கவரில் வருமான விவரங்களை தாக்கல் செய்ய கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதால், சோனி நிறுவனம் தாக்கல் செய்த வருமான விவரங்களை அந்த நிறுவனத்திடமே திருப்பி ஒப்படைத்தார்.மேலும், Dude திரைப்படம் தொடர்பாக தனியாக வழக்கு தொடர இளையராஜாவுக்கு அறிவுறுத்திய நீதிபதி , இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 19ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.