தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக 5 பேருக்கு பதவி உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேருக்கு ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய ஆட்சிப் பணியில் பதவி உயர்வின் மூலம் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2023ம் ஆண்டுக்கான தேர்வுப் பட்டியலின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில சிவில் சேவையில் பணியாற்றி வந்த 5 அதிகாரிகள் இந்திய நிர்வாக சேவைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இந்த நியமனங்கள், இந்திய ஆட்சிப்பணி விதிகள், 1954ன் விதி 8(1), பதவி உயர்வின் மூலம் நியமனம் தொடர்பான ஒழுங்குமுறை மற்றும் பணியாற்றும் பயிற்சி விதிகள் ஆகிய 3 விதிகளின் அடிப்படையில் குடியரசு தலைவரால் வழங்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் ஆலோசனையுடன், 2023 ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை ஏற்பட்ட காலியிடங்களை நிரப்பும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கவிதா, சி.முத்துக்குமரன், பி.எஸ்.லீலா அலெக்ஸ், எம்.வீரப்பன் மற்றும் ஆர்.ரேவதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் அனைவரும் தமிழ்நாடு கேடரில் பணியாற்ற உள்ளனர். தற்போது, இவர்கள் “பயிற்சி காலத்தில்” பணியாற்றி வருவார்கள் எனவும், பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
