இந்தியாவிலேயே அதிக வீடு விற்பனையாகும் நகரம் சென்னை: விலை உயர்ந்த வீடுகளுக்கு மக்கள் ஆர்வம், மற்ற நகரங்களில் விற்பனை சரிவு, வீடு விற்பனையில் 33% அதிகரிப்பு
சென்னை: சென்னையில் விலை உயர்ந்த வீடுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. சென்னை வேகமாக வளர்ந்து வரும் நகரம், இதனால் சொத்து வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, பெருநகரப் பகுதியில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருப்பதால் பலர் நிரந்தரமாக வீடு வாங்க விரும்புகின்றனர். இதனால் சென்னையின் ரியல் எஸ்டேட் சந்தை, முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்குகிறது.
அதிலும், ரூ.2 கோடிக்கு மேல் விலை போகும் பெரிய அபார்ட்மென்ட்களை வாங்க நிறைய பேர் முன் வருவதால், இந்த 3 மாதத்தில் சென்னையில் வீடு விற்பனை 33% அதிகரித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் மற்ற பெரிய நகரங்களில் வீடு விற்பனை குறைந்த நேரத்தில் இது நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ப்ராப்பர்ட்டி ஆலோசனை கொடுக்கும் அனாராக் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, 2025ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவில் வீடு விற்பனையில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.
சென்னையில் 6,010 வீடுகள் விற்பனையாகியுள்ளன - இது கடந்த வருடம் அதே காலத்தை விட 38% அதிகம். இந்தியாவின் எல்லா பெரிய நகரங்களிலும் வீடு விற்பனை 9% குறைந்துள்ள நிலையில், சென்னையின் இந்த 38% வளர்ச்சி மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இதுகுறித்து கட்டிடத்துறை நிபுணர் தெரிவித்ததாவது: உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைப்பது, தொடர்ந்து நல்ல தரமான வீடுகள் கிடைப்பது மற்றும் வலுவான வீட்டு சந்தை ஆகியவற்றால், சென்னை இந்தியாவின் மிக முக்கியமான வீட்டு சந்தைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
சென்னையில் மக்கள் முக்கியமாக ரூ.40 லட்சம் முதல் ரூ.2.5 கோடி வரை விலை போகும் நடுத்தர மற்றும் விலை உயர்ந்த வீடுகளை வாங்க விரும்புகிறார்கள். இவை புதிதாக கட்டப்படும் வீடுகளில் 93% ஆகும். மலிவான வீடுகள் மிகக் குறைவாகவே கட்டப்படுகின்றன. இது மக்கள் இப்போது நல்ல வசதியான, விலை உயர்ந்த வீடுகளை விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
வீடு கட்டும் நிறுவனங்களின்படி, ரூ.40 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை விலை போகும் வீடுகள் போரூர், கேளம்பாக்கம், கெருகம்பாக்கம் போன்ற இடங்களில் அதிகம் கட்டப்படுகின்றன. ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி விலையுள்ள வீடுகள் கே.கே.நகர், அசோக்நகர், கோரத்தூர், திருவான்மியூர், கோட்டுர்புரம் போன்ற பகுதிகளில் அதிகம் உள்ளன. மிக விலை உயர்ந்த வீடுகள் அடையாறு, பெசன்ட்நகர், ஆர்.ஏ.புரம், தி.நகர், பழைய பி.ஆர்.குளம் போன்ற இடங்களில் கட்டப்படுகின்றன. சென்னையில் வீடு விற்பனை வேகம் தொடரும். இவ்வாறு தெரிவித்தார்.
* மற்ற நகரங்களின் நிலை
கொல்கத்தா மட்டும் 4% வளர்ச்சியுடன் வீடு விற்பனையில் அதிகரிப்பு கண்ட மற்றொரு நகரமாக உள்ளது.
* இந்தியா முழுவதும் நிலைமை
மொத்தமாக, இந்தியாவில் 97,080 வீடுகள் விற்பனையாகியுள்ளன - இது கடந்த ஆண்டு 1.07 லட்சத்திலிருந்து குறைந்துள்ளது. ஆனால், மொத்த விற்பனை மதிப்பு (விலை) 14% அதிகரித்துள்ளது. முன்னணி நகரங்கள் 30,000க்கும் மேற்பட்ட வீடுகளை விற்றன. ஆனால் விற்பனை கடந்த ஆண்டை விட 16% குறைந்துள்ளது. ஏனெனில் புதிதாக கட்டப்பட்ட வீடுகளில் 35%க்கும் மேல் சாதாரண மக்களுக்கான மலிவு வீடுகளாக இருந்தன. இது மலிவு வீடுகளுக்கு நல்ல தேவை இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
புனே: இரண்டாவது பெரிய நகரமான புனேவில் 13% குறைவு ஏற்பட்டு 16,620 வீடுகள் விற்பனையாகியுள்ளன. அங்கு கட்டப்படும் வீடுகளில் பெரும்பாலானவை நடுத்தர முதல் விலை உயர்ந்த வீடுகளாக உள்ளன.
* டெல்லி சுற்றுவட்டாரப் பகுதி
இந்த பகுதியில் 12,645 புதிய வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் விற்பனை 11% குறைந்துள்ளது. புதிதாக வீடுகளில் கிட்டத்தட்ட 70% செல்வந்தர்களுக்கான விலை உயர்ந்த வீடுகளாக இருந்தன.
ஐதராபாத்: ஐதராபாதில் 1% குறைவு ஏற்பட்டுள்ளது. அங்கு கட்டப்படும் வீடுகளில் 87% விலை உயர்ந்த வீடுகளாக இருப்பதால், சாதாரண மக்களால் வாங்குவது கடினமாக உள்ளது.
* கம்ப்யூட்டர் துறை தாக்கம்
கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ரூ.2 கோடிக்கு மேல் விலை போகும் வீடுகளை நிறைய பேர் வாங்குகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், கம்ப்யூட்டர் துறையில் அமெரிக்காவில் வேலை இழக்கும் பயம் உள்ளதால், நம் நாட்டில் உள்ள கம்ப்யூட்டர் பணியாளர்கள் வீடு வாங்குகிறார்கள். வாங்குபவர்கள், குறிப்பாக தென் தமிழ்நாட்டில் இருந்து, சென்னையில் ரூ.2 கோடி வரை விலை போகும் வீடுகளை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.