கள்ளக்காதல் விவகாரம்? ஓசூர் அதிமுக நிர்வாகியின் கார் டிரைவர் வெட்டிக்கொலை
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேரண்டப்பள்ளி அருகே உள்ள மாரசந்திரத்தை சேர்ந்தவர் நாராயணப்பா மகன் ஹரீஷ் (32). இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ஓசூர் பஸ்தியை சேர்ந்த, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவராக உள்ள பிரசாந்த் என்பவரிடம் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். ஹரீஷ் டிரைவர் வேலையுடன் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்றவையும் செய்து வந்தார். இவருக்கும், ஓசூர் வானவில் நகரை சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்தது. அந்த பெண், கணவரை பிரிந்து மகன், மகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற ஹரீஷ், அங்கிருந்து ஸ்கூட்டரில் வானவில் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், மாருதி நகர் பகுதியில் ஹரீசை வழிமறித்து ஓட, ஓட துரத்தி சரமாரியாக வெட்டினர். இதில் கை, தலை உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக வெட்டு விழுந்த ஹரீஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, ஹரீஷ் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஓசூர் அட்கோ காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று, அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து, தகாத உறவு விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வட்டிக்கு பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் வெட்டி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.