அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்!!
சென்னை : அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று கூடிய நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 12 நிமிடங்களிலேயே கூட்டம் முடிந்தது. இன்று 2வது நாள் கூட்டம் கூடியதும் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்த கூட்டத் தொடரில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2 சட்டத் திருத்த முன் வடிவுகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் ரூ.35,000-மாக உயர்த்தும் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுகிறது. தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான நிபந்தனைகளை தளர்த்துவதற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதா ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா பேரவையில் தாக்கல் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று(அக்.14) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இரு மொழிக் கொள்கையை உறுதிபடுத்தும் வகையில் இந்த மசோதா தாக்கல் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.