கடைச்சரக்காக கருதக்கூடாது மைனர் குழந்தைகளின் உணர்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: ஐகோர்ட் கருத்து
சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் தரப்பில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், 11 வயதான இரட்டை ஆண் குழந்தைகளை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி கணவன்-மனைவி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, குழந்தைகளிடம் விசாரணை நடத்தி, திங்கள் முதல் வெள்ளி வரை, தாயிடமும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தந்தையிடமும் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து கணவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் முகமது சபிக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு குழந்தைகளையும் வரவழைத்து அவர்களிடம் நீதிபதிகள் விசாரித்தனர். குழந்தைகள் இருவரும், தந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் உணர்வுரீதியாக துன்புறுத்துவதால் தாயிடமே இருக்க விருப்பம் தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்டு, இரு குழந்தைகளையும் தாயிடம் ஒப்படைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மைனர் குழந்தைகளை பெற்றோரோ, நீதிமன்றங்களோ எந்த சூழ்நிலையிலும் கடை சரக்காக கருதக் கூடாது. குழந்தைகளை யாரிடம் ஒப்படைப்பது என்று வழக்கு வரும் போது, அவர்களின் உணர்வுகள், மனநலம், எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். மைனர் குழந்தைகளின் விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.