தாய்லாந்திலிருந்து கடத்தி வந்த ரூ.1.40 கோடி மதிப்பு உயர் ரக கஞ்சா பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் அதிரடி
சென்னை: தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து தனியார் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில், போதைப் பொருட்கள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 28 வயது இளைஞர் ஒருவர், தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணியாக சென்று விட்டு, விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்திருந்தார். வடமாநிலத்தை சேர்ந்த இவர், சுற்றுலாவை முடித்துவிட்டு, தனது சொந்த வடமாநிலத்திற்கு செல்லாமல் சென்னைக்கு வந்துள்ளது, ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அந்த பயணியை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அவருடைய உடைமைகளை திறந்து பார்த்து சோதித்தபோது, பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட்டுகள், உடைமைக்குள் வைத்திருந்தார். அதிகாரிகள் அந்த உணவு பாக்கெட்களை எடுத்து பிரித்து பார்த்தனர். அதனுள் ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அந்த உணவு பாக்கெட்டுகளில் 1.4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.40 கோடி. இதையடுத்து, சுங்க அதிகாரிகள் கடத்தல் பயணியை கைது செய்து, உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதோடு கைது செய்யப்பட்டுள்ள வடமாநில பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது போதைப்பொருள் கடத்தும் கும்பல், இந்த வட மாநில இளைஞரை, தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பி, அவர் மூலம் இந்த போதைப்பொருள் கடத்தலை நடத்தியதாக தெரியவந்தது. இந்த கடத்தல் பயணி, சென்னை விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்ததும் அவரிடமிருந்து, போதைப்பொருளை, மற்றொரு நபர் வாங்கி கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது தெரிந்தது. எனவே சென்னை விமான நிலைபோதைப் பொருளை வாங்க வெளியே இருந்த மற்றொரு நபர் யார் என்று விசாரணை நடந்து வருகிறது.