அதிக கட்டணம் வசூலித்த 18 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1.26 லட்சம் அபராதம்
ஆலந்தூர்: தொடர் விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்பவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த 18 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1.26 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இதை பயன்படுத்தி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களில் அதிக கட்டணங்கள் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்படி மீனம்பாக்கம் - தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மீனம்பாக்கம் ராஜேந்திரன், தாம்பரம் முகுந்தன் ஆகியோர் மீனம்பாக்கம், பெருங்களத்தூர், கிளாம்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் ஆம்னி பஸ்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் அதிகமாக கட்டணம் வசூலித்த 18 பேருந்துகளுக்கு ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பயணிகளிடம் வசூலித்த கூடுதல் கட்டணம் திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.