கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 2,170 கனஅடியாக அதிகரிப்பு..!
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து நேற்று இருந்த 1,800 கன அடியில் இருந்து 2,170 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இது சென்னையின் தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் உள்ள அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், கிண்டி, அடையாறு, வேளச்சேரி, வளசரவாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது.
மேலும் புறநகர் பகுதிகளில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், தொழிற்பேட்டைகள், குடியிருப்புகள் உள்ளிட்டவற்றுக்கும் செம்பரம்பாக்கம் ஏரி மூலம் நீர் கிடைத்து வருகிறது. அந்த வகையில், சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று 1,800 கன அடியாக இருந்த ஏரிக்கான நீர்வரத்து தற்போது விநாடிக்கு 2,170 கனஅடியாக அதிகரித்துள்ளது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.84 அடியாக உயர்ந்துள்ளது. 3.64 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 2.8 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.