கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ரேஷன் கடை ஊழியர் பலி
சோளிங்கர்: சோளிங்கர் அருகே கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ரேஷன் கடை ஊழியர் இறந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சின்னபரவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(54), அரக்கோணம் தாலுகா செம்பேடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி படவேட்டம்மாள், மகள்கள் சர்மிளா(24), தேவிகா(18), மகன் குமரன்(19). இவர்கள் ஓடுவேய்ந்த தங்களது வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு ரவிச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் தூங்கினார். ரவிச்சந்திரன் சுவர் அருகே படுத்து தூங்கினார். இதற்கிடையில் அப்பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் ஈரமாக இருந்த வீட்டின் சுவர், இரவு சுமார் 10 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ரவிச்சந்திரன் இடிபாட்டில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு எழுந்த குடும்பத்தினர் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரவிச்சந்திரனை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். வீட்டின் சுவர் இடிந்து விழுந்தபோது, ரவிச்சந்திரன் குடும்பத்தினர் வேறு பகுதியில் படுத்து தூங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.