இதய சிகிச்சைக்காக செந்தில்பாலாஜியின் சகோதரர் அமெரிக்கா செல்ல அனுமதி: நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனை எதிர்த்து அசோக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், அமெரிக்காவில் சிகிச்சை பெற உள்ள தேதி உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்தார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ், ஒருவேளை அசோக்குமார் வெளிநாடு செல்ல அனுமதியளித்தால் அவரது மனைவியின் பாஸ்போர்ட்டை ஒப்படைப்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்க வேண்டுமென்று கோரினார். அசோக்குமாருடன் அவரது மனைவியும் அமெரிக்கா செல்ல உள்ளதால் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க இயலாது எனவும் அவரது மகளின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அசோக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின் மகளின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். மனுதாரர் நிபந்தனையாக ரூ.5 லட்சம் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அசோக்குமார் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.