சுகாதார பணியாளர் உதவி மையம்: சென்னை மாநகராட்சி டெண்டர் வெளியீடு
சென்னை: சென்னை மாநகராட்சிஅதன் 200 பிரிவு அலுவலகங்களில் சுகாதாரப் பணியாளர்களின் நலனுக்காக உதவி மையங்கள் அமைக்க ரூ.60.70 லட்சம் செலவிட உள்ளது. இந்த மையங்களில் இணைய வசதியுடன் கூடிய 200 டெஸ்க்டாப் கணினிகள் மற்றும் 200 பிரிண்டர்களை மூன்று மாதங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்குவதற்கு தகுதியான நிறுவனத்தைத் தேர்வு செய்ய மாநகராட்சி டெண்டர் வெளியிட்டுள்ளது. “டெஸ்க்டாப் கணினிகள், லேப்டாப்கள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை வழங்குவதில் அனுபவம் உள்ள நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்கலாம். இம்மாத இறுதிக்குள் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு, கணினிகள் மற்றும் பிற வசதிகளை நிறுவும் பணி தொடங்கப்படவுள்ளது.
இந்த உதவி மையங்கள், மாநகராட்சியின் நிரந்தர ஊழியர்கள், 17,600-க்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்கள், தனியார் முகமைகள் மூலம் பணியமர்த்தப்பட்டவர்கள் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் போன்ற திட்டங்களில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவும். மாநில அரசு வழங்கும் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு இந்த மையங்கள் உதவி புரியும். விபத்து காப்பீடு, இறப்பு மற்றும் இறுதிச் சடங்கு உதவி, ஓய்வூதியம், மகப்பேறு பயன்கள் போன்றவற்றைப் பெறுவதற்கும் இந்த மையங்கள் உதவும்,சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சி, சுகாதாரப் பணியாளர்களின் நலனை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.