என்னை யாராலும் மிரட்ட முடியாது.. கைக்கூலிகளுக்கு விரைவில் முடிவு கட்டுவோம்: எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
சென்னை: யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடபழனியில் அதிமுக பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி; ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான். அதிமுகவை உடைக்க வேண்டும் என்று செயல்பட்டவரை மன்னித்து துணை முதலமைச்சர் பதவி வழங்கினோம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியை கவிழ்த்து கபளீகரம் செய்ய பார்த்தனர்.
கட்சியை கபளீகரம்செய்யப் பார்த்தவர்களிடம் இருந்து காப்பாற்றியவர்கள் பாஜகதான். நன்றி மறப்பது நன்றன்று என்ற வார்த்தை போல பாஜக அதிமுகவை காப்பாற்றியது. நன்றிக் கடனுக்காகவே பாஜகவுடன் கூட்டணி, வைத்துள்ளோம். அதிமுக ஆட்சியில் இருந்த பொழுது பாஜக எந்த தொந்தரவும் செய்யவில்லை. நான் கேட்ட திட்டத்தை தந்தார்கள், நிதியை விடுவித்தார்கள். எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். தன்மானத்தை விட்டுத் தரமாட்டேன். வெட்டிப் பேச்சு பேசுபவர்களுக்கு இடமில்லை; உழைப்பவர்களுக்குத்தான் கட்சியில் இடம். சில பேர் அதிமுகவை அழிக்கப் பார்க்கிறார்கள்; யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது.
அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும். யாரும் என்னை மிரட்டிப் பார்க்க முடியாது, எதற்கும் நான் அஞ்ச மாட்டேன். மழை எச்சரிக்கையால்தான் எனது சுற்றுப் பயணம் மாற்றி அமைக்கப்பட்டது. எனது பயணம் மாற்றி அமைக்கப்பட்டதால், உடனே அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் பரப்பினார்கள். அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் புகுந்து அடித்து நொறுக்கினால் உங்களை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா? அதிமுக ஆட்சியை கவிழ்க்க 18 பேரை கடத்திச் சென்றார்கள்; அவர்களை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா? சிலரை கைக்கூலிகளை வைத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறார்கள்; அவர்களுக்கு முடிவு கட்டப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மீது எடப்பாடி பழனிசாமி மறைமுக விமர்சனம் செய்தார்.