குஜராத்தில் ‘நன்கொடை’ பெயரில் குவிந்தது எப்படி? பெயர் தெரியாத கட்சிகள் அள்ளிய ரூ.4,300 கோடி
* 10 கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை ரூ.4,355 கோடி
* நிறுத்திய வேட்பாளர்கள் 47
* சந்தித்த தேர்தல்கள் 3
* பெற்ற மொத்த வாக்குகள் 58,066
* தேர்தல் செலவு ரூ.41.24 லட்சம்
கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜ திரட்டிய நன்கொடை 47 சதவீதம் உயர்ந்து ரூ.6060 கோடியை எட்டியது நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. நெடுஞ்சாலை ஒப்பந்தம் உள்பட பல்வேறு திட்டங்கள் மூலம் பலன் பெற்ற நிறுவனங்கள் பாஜவுக்கு நன்கொடை வழங்கியது அம்பலம் ஆனது. இதைத் தொடர்ந்து பாஜ கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்தது.
இந்த பரபரப்பு முடிந்து ஓராண்டு கடந்த நிலையில், மற்றொரு புள்ளி விவரம் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கோட்டையாக பாஜ தக்கவைத்துக் கொண்ட குஜராத்தில்தான் இது அரங்கேறியுள்ளது. அதாவது, 2019-20 நிதியாண்டு முதல் முதல் 2023-24 நிதியாண்டு வரை குஜராத்தில் அங்கீகரிக்கப்படாத 10 அரசியல் கட்சிகள் ரூ.4,355 கோடி ரூபாய் நன்கொடை பெற்றதாக தைனிக் பாஸ்கர் என்ற நாளிதழில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. லோக்சாகி சத்தா கட்சி 2019 முதல் 2024 வரை ரூ.1,046 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.
இதுபோல் புதிய இந்தியா ஐக்கிய கட்சி ரூ.608 கோடியை பெற்றது. தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தணிக்கை அறிக்கைகளின்படி, பாரதிய தேசிய ஜனதா தளம் ரூ.963 கோடியை வசூலித்துள்ளது. சத்யவாடி ரக்ஷக் கட்சி, பாரதிய ஜன்பரிஷத், சவுராஷ்டிர ஜனதா கட்சி, ஜன் மன் கட்சி, மனித உரிமைகள் தேசியக் கட்சி மற்றும் தாய் மண் தேசியக் கட்சி ஆகியவையும், நன்கொடை பெற்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் அடங்கும். 2015க்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட இந்தக் கட்சிகள், மிக சொற்ப வாக்குகளைப் பெற்றபோதும், நன்கொடை என்ற பெயரில் அதிக நிதியை நன்கொடையாகப் பெற்றுள்ளன.
கடந்த 2019 மக்களவைத் தேர்தல், 2022ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் இந்தக் கட்சிகள் 47 வேட்பாளர்களை மட்டுமே களமிறக்கியுள்ளன. இவை பெற்ற வாக்குகள் மொத்தம் 54,066 மட்டுமே. இது குஜராத் மாநில வாக்காளர் எண்ணிக்கையில் 0.1 சதவீதத்திற்கும் கீழ்தான். அதாவது, ஒரு சதவீதம் கூட வாக்குத்திரட்ட முடியாத இந்த கட்சிகள், இவ்வளவு பெரிய தொகையை நிதியாக வசூலித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி, தேர்தல் ஆணையத்துக்கு இந்த கட்சிகள் சமர்ப்பித்த செலவு கணக்கிற்கும், தணிக்கை அறிக்கைக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு காணப்படுகிறது.
இந்தக் கட்சிகள் அனைத்தும் தேர்தல் செலவு செய்ததாக தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த விவரங்களில் மொத்த தொகை ரூ.41.24 லட்சம் மட்டுமே. இருப்பினும், இந்தக் கட்சிகள் அந்தக் காலகட்டத்தில் ரூ.3,500 கோடி செலவிட்டதாக தணிக்கை அறிக்கைகள் மூலம் அம்பலம் ஆகியுள்ளது. இதன்மூலம், இந்த நிதி எதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட தணிக்கைத் தரவுகளின்படி, பாரதிய ஜன்பரிஷத் ரூ.177 கோடி, சவுராஷ்டிரா ஜனதா கட்சி ரூ.141 கோடி, லோக்ஷாஹி சத்தா கட்சி ரூ.22 கோடி, சத்யவாடி ரக்ஷக் கட்சி ரூ.10 கோடி செலவிட்டதாக தெரிய வருகிறது.
பாஜவுக்கும் இந்த கட்சிகளுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், பாஜவின் கோட்டையாகக் கருதப்படும் குஜராத்தில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது, அது குறித்த சந்தேகங்களையும் எழுப்பியுள்ளதாக, அரசியல் நோக்கர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மூலம் திரட்டப்பட்ட இந்த நிதி யாருக்கு சென்றுள்ளது என்ற கேள்வியையும் அவர்கள் முன்வைக்கின்றனர். ஒன்றிய பாஜ ஆட்சியில், வரி வசூல் இலக்கு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த இலக்குகளும் சர்வசாதாரணமாக எட்டப்பட்டு விடுகின்றன.
ஜிஎஸ்டி தொடங்கி அனைத்து வகையிலும் வருவாய் ஆதாரங்களை ஒன்றிய பாஜ அரசு விரிவுபடுத்தி வருகிறது. அப்பாவி மக்கள் சிலருக்கு வரி ஏய்ப்பு நோட்டீஸ்கள் பறக்கின்றன. சாதாரணமாக தொழில் செய்வோர் கூட, யுபிஐ பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்டு, விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புகிறது. இப்படி நுணுக்கமாக கண்டறிய பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏஐ தொழில்நுட்பம் முழு திறனுடன் பயன்படுத்தப்படும் காலமாக இது உள்ளது.
அப்படியிருக்க, இந்த அரசியல் கட்சிகள் திரட்டிய நிதியை தேர்தல் ஆணையம் கண்டுபிடிக்க தவறி விட்டதா? அல்லது கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதா என்ற கேள்விகள் பல தரப்பிலும் எழுப்பப்படுகின்றன. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் இத்தகைய கேள்விகளை முன்வைத்துள்ளார். வாக்காளர் பட்டியல், வாக்குத்திருட்டு குற்றச்சாட்டுகள், முறைகேடுகளை தொடர்ந்து அங்கீகாரமற்ற கட்சிகள் பெற்ற நிதி தொடர்பாக விசாரணை நடத்தப்படுமா, நேர்மையாக விசாரணை நடக்குமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
* இந்தியா முழுவதும் இருந்து குவிந்த நன்கொடை
பெயர் தெரியாத கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் நிதி குவிந்தது அனைவரையும் மலைக்கச் செய்துள்ளது. அதிலும், குஜராத்தை சேர்ந்த அந்த துக்கடா கட்சிகளுக்கு ராஜஸ்தான் மகாராஷ்டிரா, உ.பி, கர்நாடகா, தெலங்கானா என்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நன்கொடை கிடைத்துள்ளது பெருத்த சந்தேகத்தை கிளப்பி உள்ளது. குறிப்பாக 4 வேட்பாளர்களை நிறுத்தி 9029 வாக்குகளை மட்டுமே பெற்ற புதிய இந்திய ஐக்கிய கட்சிக்கு மொத்தம்608 கோடி கிடைத்துள்ளது. இந்த கட்சிக்கு பெங்களூருவை சேர்ந்த இன்வெஸ்சிஸ் டெக்னோ என்ற நிறுவனம் ரூ.3 கோடி தந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த சுமீத் மகேஸ்வரி ரூ.40 லட்சம், சத்யம் ரூ.33 லட்சம் தந்துள்ளனர். இதேபோல், பாரதிய தேசிய ஜனதா தளம் கட்சிக்கு ஹிசிமா பார்மா என்ற ராஜஸ்தான் மருந்து கம்பெனி ரூ.1.75 கோடி நிதி தந்துள்ளது.
சந்தேகங்கள்
* நன்கொடை தந்தவர்கள் யார்?
* யாருக்குேம தெரியாத அரசியல் கட்சிகள் இவர்களுக்கு எப்படி தெரிந்தது?
* இப்படிபட்ட கட்சிகளுக்கு ஏன் இவ்வளவு நிதி தர வேண்டும்?
* நன்கொடை தரச் சொன்னது யார்?
* வேறொரு கட்சிக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டதா?
* ஊழல் பணத்தை வெள்ளையாக்க இப்படி நன்கொடை தரப்பட்டதா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது.
பல கோடி வருமானம், செலவு சில லட்சம்
பெற்ற வாக்குகளோ சில ஆயிரம்
கட்சியின் பெயர் பெற்ற நன்கொடை நிறுத்திய வேட்பாளர்கள் மொத்த வாக்குகள் தேர்தல் செலவு
லோக்சாகி சத்தா ரூ.1046 கோடி 4 3997 ரூ. 2.27 லட்சம்
பாரதிய தேசிய ஜனதா தளம் ரூ.963 கோடி 8 11496 ரூ.2.83லட்சம்
எஸ்ஏபி ரூ.663 கோடி 6 11692 ரூ.12.18 லட்சம்
புதிய இந்தியா ஐக்கிய கட்சி ரூ.608 கோடி 4 9029 ரூ.1.61 லட்சம்
சத்யவாடி ரக்ஷக் கட்சி ரூ.416 கோடி 2 1042 ரூ.1.43 லட்சம்
பாரதிய ஜன பரிஷத் ரூ.249 கோடி 15 14324 ரூ.14.05 லட்சம்
சவுராஷ்டிரா ஜனதா கட்சி ரூ.20 கோடி 1 140 ரூ.1.47 லட்சம்
ஜன் மான் கட்சி ரூ.133 கோடி 2 480 ரூ.1.31 லட்சம்
தாய்மண் தேசிய கட்சி ரூ.120 கோடி 2 1887 ரூ.82 ஆயிரம்
ஜி.கே. கட்சி ரூ.138 கோடி 3 3979 ரூ.3.27 லட்சம்
* வரி ஏய்ப்பு முயற்சியா?
கடந்த ஜூலை மாதம், 80ஜிஜிசி பிரிவின் கீழ் போலியாக வருமான வரி விலக்குப் பெற்றதாக கருதப்படும் பலரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டுகள் நடத்தினர். இதில் பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைப்போல், அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதாக கணக்குக் காட்டி வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை என்ற பெயரில் வரி விலக்கு பெறுவதில் 20 முதல் 30 சதவீதம் போலியானவை எனவும், நன்கொடையாளர்கள் 80 முதல் 90 சதவீதம் வரை ரொக்கமாகத் திரும்பப் பெறுகிறார்கள்; கட்சிகள் 10 முதல் 20 சதவீதம் கமிஷனை வைத்துக் கொள்கின்றன என ரெய்டுகளில் ஈடுபட்ட வருமான வரித்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
* தூங்கும் ஈடி, ஐடி
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மணல் அள்ளினால் கூட ஓடோடி வந்து மூக்கை நுழைப்பதுதான் ஒன்றிய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை(ஈடி), சிபிஐ மற்றும் வருமான வரித் துறை(ஐடி) கடந்த 11 ஆண்டுகளாக கடைபிடித்து வரும் புதுபாணி. ஆனால், பாஜ ஆளும் மாநிலங்களில் வானமே இடிந்து கீழே விழும் அளவுக்கு ஊழல் நடந்தாலும் இந்த அமைப்புகள் அசையாமல், தூங்குவதுபோல் நடிக்கும் என்பதற்காக இந்த அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை மோசடி ஒர் எடுத்துக்காட்டு. இந்த 3 அமைப்புகளும் ஒன்று சேர்ந்து விசாரிக்க வேண்டிய இந்த நன்கொடை மோசடி விவகாரத்தை அறிந்தும் அறியாதது போல் அந்த அமைப்புகள் நடந்து கொள்வது இதில், ஆளும் பாஜவுக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்கேத்தை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.