கூடுவாஞ்சேரி அருகே நடைபெற்ற காவலர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு சான்றிதழ்: டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கினார்
இதில், மொத்தம் 13 வகையான போட்டிகள் 3 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. ரைபில் பிரிவு 5 போட்டிகள், பிஸ்டல் ரிவால்வர் பிரிவு 4 போட்டிகள் மற்றும் கார்பைன் ஸ்டன் கன் பிரிவு 4 போட்டிகள் இப்போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறையின் பல்வேறு நகரங்கள், மண்டலங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 204 ஆண் போட்டியாளர்கள் 9 அணிகளாகவும் 104 பெண் போட்டியாளர்கள் 8 அணிகளாகவும் கலந்துகொண்டனர்.
இதனைதொடர்ந்து, நேற்று முன்தினம் நடைபெற்ற நிறைவு விழாவில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றி பெற்ற அணிகளுக்கும் தமிழக காவல்துறை டிஜிபி சங்கர்ஜிவால் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் சுழற் கேடயங்களை அளித்து வாழ்த்துரை வழங்கினார். இதில், ஆண்களுக்கான மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி- 2025ன் ஒட்டுமொத்த சாம்பியன்சிப் கோப்பையை தெற்கு மண்டலம் அணி வென்றது. அதுபோல தலைமையிட அணி ஒட்டுமொத்த சாம்பியன்சிப் இரண்டாமிட கோப்பையையும் ஆயதப்படை அணி ஒட்டுமொத்த சாம்பியன்சிப் மூன்றாமிட கோப்பையையும் வென்றன.
பெண்களுக்கான மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி-2025-ன் ஒட்டுமொத்த சாம்பியன்சிப் கோப்பையை மேற்கு மண்டலம் அணி வென்றது. அதுபோல வடக்கு மண்டலம் அணி ஒட்டுமொத்த சாம்பியன்சிப் இரண்டாமிட கோப்பையையும் சென்னை மாநகர காவல் அணி ஒட்டுமொத்த சாம்பியன்சிப் மூன்றாமிட கோப்பையையும் வென்றன. இவை தவிர ஆண், பெண் பிரிவில் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு ஒட்டுமொத்த பெஸ்ட் ஷாட் மெடல் ரிவால்வர், பிஸ்டல் பிரிவிலும் கார்பைன் ஸ்டன்கன் பிரிவிலும் வழங்கப்பட்டன.