ஜிஎஸ்டி வரி குறைப்பால் மக்கள் விரும்பிய பொருட்களை குறைந்த விலையில் பெறலாம்: பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: புதிய வரி குறைப்பு அறிவிப்புகள் நாளை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 5 மணியளவில் நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது;
"நவராத்திரியின் முதல் நாளில் (செப்.22) ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலாகிறது. இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள், பெண்கள், வணிகர்கள் என அனைவரும் பயன் பெறுவர். மக்கள் விரும்பிய பொருட்களை குறைந்த விலையில் பெறலாம், சேமிப்பு அதிகரிக்கும்.
ஜிஎஸ்டி வரிக் குறைப்பானது நடுத்தரக் குடும்பங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏழைகள், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான பொருள்களை குறைந்த விலையிலேயே வாங்கலாம்.
வருமான வரி குறைப்பு மூலம் நடுத்தர மக்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் தற்போது 2வது பரிசு கிடைத்துள்ளது. இது நடுத்தர மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும். 12% GSTல் இருந்த 99% பொருட்கள், 5% GSTக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் பிரட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை நாளை முதல் குறையும்.
சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மக்களுக்குத் தேவையான பொருள்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.உள்நாட்டுப் பொருள்கள் சிறந்த தரத்துடன் தயாரிக்கப்பட வேண்டும். அவை உலக தரத்துடன் போட்டிபோடும் வகையில் இருப்பது அவசியம்.
உள்நாட்டுக் தயாரிப்புகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும். சுதந்திரத்திற்குப் பிறகும் சுதேசி பயன்பாடுதான் பலனளித்தது. நாம் அனைவரும் இணைந்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும்" என உரையாற்றினார்.