ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமல்: பல்வேறு பொருட்களின் விலை குறைந்தது
டெல்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனை அடித்து பல்வேறு பொருட்களின் விலை குறைந்தது. 5, 12, 18, 28% என இருந்த ஜிஎஸ்டி விகிதம் 2 அடுக்குகளாக குறைக்கப்பட்டு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து இன்று முதல் 5%, 18% என்ற அடியில் மட்டுமே ஜிஎஸ்டி வரி விகிதம் அமலில் இருக்கும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். புகையிலை மற்றும் ஆடம்பர பொருள்களுக்கான ஜிஎஸ்டி 40%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உணவு, மளிகைப் பொருள்களில் 99 சதவீதம், 12%லிருந்து 5% ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
அனைத்து மாநிலங்களுடன் ஆலோசித்தே ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்தியர்கள் மொத்தம் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு சேமிக்க முடியும். ஜிஎஸ்டி வரி குறைப்பால் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூறினார்.
99% பொருட்கள் 5% வரி விதிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன. டிராக்டர் டயர்கள், பாகங்கள், டிராக்டர்கள், உயிரி பூச்சிகொல்லிகள், வேளாண் எந்திரங்கள் விலை குறையும். சுகாதார காப்பீடு, ஆயுள் காப்பீடு, 33 உயிர்காக்கும் மருந்துகள் விலை குறைந்தன. பால், முட்டை, தயிர், உப்பு, பனீர், பீஸா, பிரட், பென்சில், கிரேயான், ஷார்ப்னர், நோட்டு புத்தகங்கள், வரைபடங்கள், விளக்கப்படங்கள், எரேசர், எண்ணெய், ஷாம்பு, டூத் பேஸ்ட், பிரஷ், சோப், வெண்ணெய், நெய், சீஸ், தையல் எந்திரங்கள், பாகங்கள், டி.வி., ஏ.சி.க்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் விலை குறைந்தது. ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் காரணமாக கார்கள், இருசக்கர வாகனங்கள் விலையும் குறைந்தன.