யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி
வால்பாறை: வால்பாறை அருகே இன்று அதிகாலை யானை தாக்கி பாட்டி, பேத்தி பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்து உள்ள வாட்டர்பால்ஸ் எஸ்டேட் உமாண்டி முடக்கு பிரிவில் தோட்ட தொழிலாளியாக பணியாற்றி வருபவர் மாரிமுத்து. இவரது தாய் அசாலா (55), மகள் ஹேமா ஸ்ரீ (3). மகன் ஒருவரும் உள்ளார். இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் வீட்டின் ஜன்னலை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த அசாலா, தனது பேத்தி ஹேமா யை தூக்கி கொண்டு முன் பக்க கதவை திறந்தார்.
அப்போது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த ஒற்றை யானை இருவரையும் தாக்கியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தில் குழந்தை ஹேமா ஸ்ரீ பலியானது. படுகாயமடைந்த அசாலாவை அங்கிருந்தவர்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அசாலா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். வனத்துறையினர் ஒற்றை யானையை கண்காணித்து வனத்துக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.