நான்கு நாள் பயணமாக ஆளுநர் ரவி இன்று மாலை டெல்லி செல்கிறார்
மீனம்பாக்கம்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக இன்று மாலை டெல்லி செல்கிறார். அவருடன் செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி செல்கின்றனர். சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று மாலை 5.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென 4 நாள் பயணமாக ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக புதுடெல்லிக்குப் புறப்பட்டு செல்கிறார். அவருடன் செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி செல்கின்றனர். பின்னர் டெல்லியில் இருந்து வரும் 23ம் தேதி மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.
புதுடெல்லியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதாக கூறப்படுகிறது. முன்னதாக, தமிழ்நாடு ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே தொடர் மோதல் காரணமாக, சுதந்திர தினத்தன்று ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக உள்பட கூட்டணி கட்சிகள் மற்றும் நடிகர் விஜய்யின் தவெகவும் புறக்கணித்து விட்டன. இந்நிலையில், புதுடெல்லிக்கு 4 நாள் பயணமாக செல்லும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அங்கு தங்கியிருக்கும் நாட்களில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல்வேறு அமைச்சர்களை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.