ஆளுநர்களை வைத்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்க போகிறீர்கள்? ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 7 கேள்விகள்
சென்னை: இந்திய நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்.
* ஊழல்வாதிகள் பாஜ.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, வாஷிங்மெஷினில் வெளுப்பது எப்படி?
* நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?
* ஒன்றிய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்கு புறம்பான மூடநம்பிக்கைகளை சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?
* எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்து குழப்பம் விளைவித்து என்ன சாதிக்க போகிறீர்கள்?
* பாஜ.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளை பறிக்கும் வாக்கு திருட்டை #சார் ஆதரிப்பது ஏன்?
* இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாக தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம் வராதது ஏன்?
* கீழடி அறிக்கையை தடுக்க குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?
இதற்கெல்லாம் பதில் வருமா? இல்லை வழக்கம்போல, வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியில் பொய் பிரசாரத்தை தொடங்குவீர்களா? இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.