அரசுப்பணிகளில் 119 மாற்றுத்திறனாளிகளுக்கு பணியிடங்கள் அடையாளம்: அரசாணை வெளியீடு
சென்னை: அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் 119 பணியிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையில் கூறியிருப்பதாவது:அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பங்களிப்பை பெரிதும் உயர்த்தும் வகையிலும், அவர்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் 119 அரசு பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவகையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016ன் படி, “Persons with Benchmark Disabilities” எனப்படும் குறிப்பிட்ட விகிதத்தில் இயலாமை உள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க ஏற்றதாக கருதப்படும் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
குறிப்பாக, கனிமவளம், சட்டம், கூட்டுறவு, ஊராட்சி - நகராட்சி, போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, சுற்றுலா, வேளாண், தகவல் தொழில்நுட்பம், உள்துறை, நிதி நிர்வாகம், சுகாதாரம், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு, வீட்டுவசதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இப்பணியிடங்கள் உள்ளன. இதில் மேலாளர் முதல் பாதுகாவலர் வரை பதவிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேவையான சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், குறைந்தபட்ச மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் (Benchmark Disability Certificate) பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என கருதப்படுகின்றன.