சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு மாற்றம்: நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவர்கள் தகவல்
சென்னையில் தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு மாற்றம் செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 நாள்களுக்கு முன் வீட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் நல்லகண்ணு தலையில் காயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நல்லகண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு நல்லகண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமாகிய நல்லகண்ணு நேற்று முன் தினம் (22 ஆகஸ்ட் 2025), வீட்டில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக சென்னை, நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு, தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், நூறு வயது தாண்டிய நிலையில், வயது மூப்பின் காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்க, நரம்பியல் நிபுணர், நுரையீரல் நிபுணர், இருதய நிபுணர், தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக தற்போது, அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று தனியார் மருத்துவமனை கூறியது. நந்தனம் தனியார் மருத்துவமனையில் இருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நல்லகண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.