கடந்த ஆண்டை விட அதிகம் அரசு பஸ்களில் 2 நாளில் 2.80 லட்சம் பேர் பயணம்: அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்
அரியலூர்: கடந்தாண்டு 1.68 லட்சம் பயணிகள் அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்த நிலையில், இந்தாண்டு 2 நாட்களில் 2.80 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்திருப்பது, அரசுப் பேருந்துகள் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறையிலிருந்து சென்னை மாதவரத்திற்கு, குளிர்சாதன வசதி பேருந்து சேவையை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த அனைத்து பயணிகளும், எந்தவித சிரமமும் இல்லாது பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். முதல் நாள் 1 லட்சத்து 28 ஆயிரம் பேர், இரண்டாவது நாள் 2 லட்சத்து 28 ஆயிரம் பேர் என 3 லட்சத்து 56 ஆயிரம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். கடந்தாண்டு 1.68 லட்சம் பயணிகள் அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்த நிலையில், இந்தாண்டு 2 நாட்களில் 2.80 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்திருப்பது, அரசுப் பேருந்துகள் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் தொடர்பாக புகார் வந்திருந்தது. ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்து அறிவுரை வழங்கி அதையும் சரி செய்து விட்டோம். பண்டிகை பயணத்திற்கு, தனியார் ஆம்னி பேருந்துகளை நாடுபவர்கள் கூட தற்பொழுது அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். மேலும் கொரோனா காலத்தில் இருந்து இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்து வந்த நிலையில் தற்போது அதிகளவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய தொடங்கியுள்ளனர்.
மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு பண்டிகையையும் போக்குவரத்து துறை, முன்கூட்டியே திட்டமிட்டு பேருந்துகளை இயக்கி வருகிறோம். இதனால் எந்தவித பிரச்னையும் இன்றி மக்கள் பயணம் செய்கின்றனர். முன்பதிவு செய்த பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்து, பொறுமையுடன் கிளாம்பாக்கத்தில் இருந்து தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர். தனியார் பேருந்துகளை ஒப்பந்தத்தில் எடுத்து பயணிகளுக்கு சேவையாற்றி வருகிறோம்.
அரசு பேருந்தில் என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அதே கட்டணம் தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும். வடகிழக்கு பருவ மழையை போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்ள தயார் நிலையில் மின்சார வாரியம் உள்ளது. போதிய மின் கம்பங்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.