சம்பள உயர்வு கேட்டு அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தற்காலிக அரசு பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தற்காலிக ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: ஆந்திர மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வருகிறார்கள்.
தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. இதுகுறித்து பல வருடங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். மாநில அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தற்காலிக ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் மாநில அரசு நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் ரூ.18 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்கி வருகிறது.
முதல்வர் சந்திரபாபு நாயுடு, நான் முதலமைச்சராக உடன் தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என தெரிவித்தார் ஆனால் இரண்டு வருடங்கள் கடந்தும் இதுவரை சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.
எனவே எங்கள் முக்கிய கோரிக்கைகளான பணி நிரந்தரம், சமமான வேலைக்கு சமமான ஊதியம், மருத்துவ விடுப்பு, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனே அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் கிரிதர், செயலாளர் வில்வநாதன், பொருளாளர் பிரகாஷ், மகளிர் அணி தலைவி லதா, துணைத்தலைவி யமுனா, பொதுச் செயலாளர் கீதா, செயலாளர் லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.