அரசு பள்ளி மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை சுற்றுலா
மதுக்கரை : கோவை மாவட்டம், மதுக்கரை வட்டார வேளாண்மை துறையின் அட்மா திட்டத்தின் மூலம் பள்ளிக்கல்வி துறையுடன் இணைந்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இயற்கை வேளாண்மை கல்வி சுற்றுலா என்ற பெயரில் நேற்று நம்மாழ்வார் அங்கக வேளாண்மை மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் சுகந்தி, நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து ராமசுப்பிரமணியன், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் பூசப்பட்ட, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்துதல் கூடாது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை தங்களது பண்ணை கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்ய வேண்டும்.
செயற்கை உரங்கள், இயற்கை உரங்களை பயன்படுத்துதல் மற்றும் தேனீ வளர்த்தல், மீன் வளர்த்தல், காளான் வளர்த்தல், ஐந்திலை கரைசல் மற்றும் 3ஜி கரைசலை பயன்படுத்தி பூச்சி மருந்துகளை கட்டுப்படுத்துதல் பற்றி விளக்கி கூறினார். இதையடுத்து மாணவர்களை, இயற்கை விவசாய பண்ணையின் காய்கறி சாகுபடி வயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று, இயற்கை வேளாண்மை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இயற்கை கல்வி சுற்றுலாவில் மதுக்கரை, ஒத்தக்கால்மண்டபம், மலுமிச்சம்பட்டி, செட்டிப்பாளையம், பிச்சனூர், வெள்ளலூர் உள்ளிட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்த பட்டறிவு சுற்றுலாவில், சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்செல்வி, வேளாண்மை துணை இயக்குனர் நிர்மலா, மதுக்கரை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட மேலாளர் தனப்பிரியா, உதவி திட்ட மேலாளர் சமித்தா ஆகியோர் செய்திருந்தனர்.