அரசு அதிகாரி தம்பதி வீட்டில் 56 பவுன் திருடிய ஆசாமி கைது
சேலம்: சேலம் சூரமங்கலத்தில் அரசு அதிகாரி தம்பதி வீட்டில் 56 பவுன் திருடிய, கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். சேலம் சூரமங்கலம் அடுத்த நரசோதிப்பட்டி என்.கே.என் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (58). இவர் சேலம் 5 ரோடு பகுதியில் அரசு அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மணிமேகலைதேவி வேளாண்மைத்துறை உதவி இயக்குனராக நாமக்கல்லில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது வீட்டில் கடந்த 11ம் தேதி 56 பவுன் நகை, ரூ.95 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்து வரும் ஒரு மர்மநபர் வீட்டிற்குள் நுழைவது தெரியவந்தது. தொடர்ந்து அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சிசிடிவியில் பதிவான நபர், கிருஷ்ணகிரியை சேர்ந்த தர்மராஜ் என்கிற தர்மன் (45) என்பது தெரியவந்தது.இதனையடுத்து சூரமங்கலம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர் தான் அரசு அதிகாரி சிவக்குமாரின் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்துகொண்ட தர்மன், வீட்டு பூட்டை கம்பியால் உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தர்மனிடம் இருந்து 42 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.