அரசை நடத்துவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்; அதிகாரிகள் கிடையாது: உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதில்
சென்னை: அரசை நடத்துவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்; அதிகாரிகள் கிடையாது என உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார். எழுத்தாளர்களுக்கு வீடு வழங்குவது தொடர்பான வழக்கில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசை நடத்துவது துரதிர்ஷ்டவசமானது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று காலை தெரிவித்திருந்தார்.
முன்னாள் டி.ஜி.பி. திலகவதி ஏற்கனவே அரசின் வீட்டு வசதி வாரியம் மூலம் வீடு பெற்றுள்ள நிலையில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அவருக்கு வீடு ஒதுக்க முடியாது என அரசு தெரிவித்ததற்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கலைஞர் கனவு இல்லம் திட்டத்திலும் வீடு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டிருந்தார்.
அரசு இதற்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தது. அரசின் மேல்முறையீடுக்கு எதிராக நீதிபதியிடம் திலகவதி புகார் அளித்திருந்தார். அப்போது, “எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு என்பது உணர்வுப் பூர்வமான விஷயம். இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குத் தெரியாது. அதிகாரிகள் இணை அரசாங்கத்தை நடத்துவது துரதிர்ஷ்டவசமானது” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியிருந்தார். இதற்கிடையே, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கவிஞர் வைரமுத்து வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வர உள்ளது.