குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் ..!!
சென்னை: குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் அனுமதி இல்லாமல் இளமை இதோ இதோ, ஒத்தரூபாய் தாரேன், ஏன் ஜோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம். செந்தில் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவை பிறப்பித்திருந்தார்.
இதனை அடுத்து ஓடிடி தளத்தில் வெளியான படத்தில் வெளியான பாடல்கள் நீக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த தடையை நீக்க கோரி மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மனுதாக்கல் செய்திருந்தது. குட் பேட் அக்லி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் ஒன்றில் சோனி நிறுவனத்திடம் தாங்கள் பெற்றதாகவும் தற்போது இளையராஜா பாடல்களை குட் பேட் அக்லி திரைப்படத்தில் இருந்து நீக்கியாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை நீதிபதி என். செந்தில் குமார் விசாரித்தார்.
இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாடல் ஒன்றை வாங்கியதாக கூறுகிறார்கள் ஆனால் பதிப்புரிமை சட்டப்படி இசையமைப்பாளர்களிடம் தான் பாடல் உரிமை உள்ளதாகவும் ஒட்டுமொத்த படத்திற்கான தயாரிப்பாளருக்கு அந்த உரிமை இருந்தாலும் பாடல்களை தனியாக எடுத்து 3ம் வகுப்பு விற்க தயாரிப்பாளர்களுக்கு உரிமை இல்லை என்று வாதம் முன்வைக்கப்பட்டது. பட தயாரிப்பு நிறுவன சார்பில் தயாரிப்பாளர்களுக்கு தான் முழு உரிமை உள்ளது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதி செந்தில் குமார் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்து இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார். அதில் பாடல்களை உருமாற்றம் செய்வதை தடுக்கவும், அனுமதியின்றி பயன்படுத்துவதை தடுக்கவும் இளையராஜாவுக்கு உரிமை உள்ளது என்ற தீர்ப்பை குறிப்பிட்டார். ஆனால் இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தலையிட முடியாது. நீக்கவும் முடியாது என்று மறுப்பு தெரிவித்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.