ஒரு பவுன் ரூ.75,200க்கு விற்பனை தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து நேற்று ஒரு பவுன் ரூ.75,200க்கு விற்பனையாகி வரலாற்று உச்சத்தை தொட்டது. மேலும், வெள்ளி விலையும் உயர்ந்ததால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த மாதம் 23ம் தேதி அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.75,040 என்ற புதிய வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்தது. தொடர்ந்து, தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 2ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்து ஒரு பவுன் ரூ.74,320க்கு விற்றது.
3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து 4ம் தேதி தங்கம் பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு பவுன் ரூ.74,360க்கும் விற்பனையானது. 5ம் தேதி பவுனுக்கு ரூ.600 அதிகரித்து ஒரு பவுன் ரூ.74,960க்கு விற்றது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,380க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,040க்கு விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது. ஏற்கனவே இதற்கு முன்பு கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி ஒரு பவுன் ரூ.75,040 விற்றதுதான் உச்சபட்ச விலையாக இருந்து வந்தது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்தது. இந்த தொடர் விலையேற்றம் நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை விலை உயர்வை தான் சந்தித்தது. நேற்றைய தினம் தங்கம் விலை கிராமிற்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,400க்கும், பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு பவுன் ரூ.75,200க்கும் விற்றது. தங்க விலை வரலாற்றில் இது அதிகப்பட்ச விலை என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் 3வது நாளாக நேற்று அதிகரித்து காணப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.127க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது. தங்கம், வெள்ளி விலை போட்டிப் போட்டு உயர்ந்து வருவதால் நகைபிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.